திருப்பதியில் அலைமோதும் கூட்டத்தால் லட்டு தட்டுப்பாடு.. ஏழுமலையான் பக்தர்கள் ஏமாற்றம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே ஒவ்வொரு பக்தருக்கும் தற்போது வழங்கப்படுகிறது.
திருப்பதி: ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே ஒவ்வொரு பக்தருக்கும் தற்போது வழங்கப்படுகிறது. எனவே கூடுதல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான தரிசிக்க பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தற்போது கோடை விடுமுறை என்பதால் ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. இதனால் உண்டியல் வருமானமும் உயர்ந்துள்ளது.
திருப்பதி என்றாலே பலரது நினைவுக்கு வருவது ஏழுமலையானும் அந்த கோவிலில் கொடுக்கும் பிரசாதமான லட்டும்தான். நெய் வாசமும் முந்திரி, கல்கண்டு, உலர் திராட்சை, ஏலக்காய் என சுவையோடு இருக்கும் லட்டு பிரசாதம் அனைவருக்கும் பிடித்தமானது.

உண்டியல் காணிக்கை
கோடை விடுமுறை காரணமாக திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த மே மாதத்தில் 22.62 லட்சம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்துள்ளனர். 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது. கடந்த மே மாதம் மட்டும் உண்டியல் காணிக்கையாக ரூ.130 கோடியே 29 லட்சம் வந்துள்ளது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் இவ்வளவு பெரிய தொகை வந்தது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.

அலைமோதும் கூட்டம்
வார விடுமுறை நாளான சனிக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிறுக்கிழமை என்பதால் திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன.

காத்திருக்கும் பக்தர்கள்
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக திருமலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தாலும் தங்கும் அறைகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இலவச தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் 48 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.

லட்டு தட்டுப்பாடு
திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தின் அறுபத்தி நான்கு அறைகளும் நிரம்பி விட்ட நிலையில், அங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் நீளத்திற்கு பக்தர்கள் இலவச தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர். பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது. இதனால் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.

பக்தர்கள் ஏமாற்றம்
1 லட்டு ரூ 50 வீதம் பக்தர்களுக்கு எவ்வளவு லட்டு வேண்டுமென்றாலும் கூடுதலாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கூட்டம் அதிகரிப்பதால் கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு உள்ளதால் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கூறுகின்றனர். இதனால் அதிகம் லட்டு வாங்கிச்செல்லலாம் என நினைத்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.












Click it and Unblock the Notifications