திருப்பதி ஏழுமலையான் தரிசனம் : டிசம்பர் மாத இலவச தரிசன டிக்கெட் புக்கிங் முடிந்தது
திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் வெளியிடப்பட்ட சில நிமிடங்களில் முடிந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: ஏழுமலையானை தரிசிக்க டிசம்பர் மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு காலை 9 மணிக்கு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத் தீர்த்தது. திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூலோக வைகுண்டம் என்ற பெருமைக்குரியது திருப்பதி ஏழுமலையான் கோவில். இங்கு தினசரியும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். உண்டியல் காணிக்கை தினசரியும் கோடிக்கணக்கில் வசூலாகும்.
கொரோனா காலத்தில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது தினசரி 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி ஏழுமலையானை இலவச தரிசனத்தில் சென்று வழிபடும் பக்தர்களுக்கு தரிசன அனுமதி அட்டை நேரில் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஆன்லைன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அடுத்த மாதத்துக்கான இலவச தரிசன டிக்கெட் இன்று காலை 9 மணியளவில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தரிசன டிக்கெட் வெளியிடப்பட்ட சில நிமிட நேரங்களில் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.
டிசம்பர் மாதத்தில் கார்த்திகை மாதம் பாதி நாட்களும் மார்கழி மாதம் பாதி நாட்களும் இணைந்து வருகிறது. இந்த மாதங்களில் ஏராளமானோர் ஏழுமலையானை தரிசனம் செய்ய விரும்புவார்கள். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகம் இருந்தாலும் பலரும் ஆர்வத்துடன் ஆன்லைனில் புக் செய்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் மற்றும் இலவச டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆன்லைனில் வெளியிடுகிறது. இதனை பக்தர்கள் பெற்று, குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில் திருப்பதிக்கு வந்து, சுவாமியை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.
இலவச தரிசன டிக்கெட் போல டிசம்பர் மாதத்திற்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளும் முழுவதுமாக விற்று தீர்ந்து விட்டதாக இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் திருமலையில் தங்குவதற்கான அறைகள் டிசம்பர் மாதத்துக்கான ஒதுக்கீடு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.
இதனிடையே திருமலை திருப்பதி டைரி, காலண்டர்கள் வாங்குவதற்கு பக்தர்கள் ஆர்வம் காட்டி வருவார்கள். இந்த ஆண்டு டைரி, காலண்டர் ஆன்லைன் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in இணைய தள பக்கத்தில் முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications