திருப்பதி ஏழுமலையானை அமெரிக்காவில் தரிசிக்கலாம்.. 8 நகரங்களில் சீனிவாச கல்யாணம்
திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர்.
திருமலை: திருமலையில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் 30 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு வாரவிடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை நாட்களில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கம்.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இன்று பள்ளிகள் திறக்கப்படுவதால் வெள்ளிக்கிழமை இரவு முதல் திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் சனிக்கிழமை காலை முதல் வைகுண்டம் காத்திருப்பு அறைகள் நிரம்பி தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதானக்கூடம் வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சுமார் 30 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கட்டுக்கடங்காத கூட்டம்
இதையறிந்த தேவஸ்தான செயல் அதிகாரி தர்மாரெட்டி அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார். பின்னர் வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு தேவையான அன்னப்பிரசாதம், குடிநீர் விரைந்து வழங்க உத்தரவிட்டார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், வழக்கமாக வைகுண்ட ஏகாதசி மற்றும் பிரம்மோற்சவ கருடசேவை உள்ளிட்ட நாட்களில்தான் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் இருக்கும். ஆனால் தற்போது கடந்த வாரத்தை போன்று இந்த வாரமும் திடீரென பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் பக்தர்கள் 30 மணிநேரம் காத்திருந்து சுவாமியை தரிசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

விஐபி தரிசன டிக்கெட் ரத்து
ஏற்கனவே வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு விஐபி டிக்கெட் வழங்கப்படுவது ரத்து செய்யப்பட்டது. அதேபோன்று வாராந்திர சேவைகளான திங்கட்கிழமை நடைபெறும் விசேஷ பூஜை, செவ்வாய்க்கிழமை நடைபெறும் சகஸ்ர தீப அலங்கார சேவை, வியாழக்கிழமைகளில் நடக்கும் திருப்பாவடா சேவையும் ரத்து செய்யப்பட்டு அந்த நேரத்தில் கூடுதலாக இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அமெரிக்காவில் சீனிவாச கல்யாணம்
இதனிடையே கொரோனா பரவல் காரணமாக திருப்பதி வர முடியாமல் பல லட்சக்கணக்கான வெளிநாடு வாழ் பக்தர்கள் தவித்து வருகின்றனர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அமெரிக்க வாழ் இந்தியர்களுக்காக வருகிற 18ஆம் தேதி முதல் ஜூலை 9ஆம் தேதி வரை 8 நகரங்களில் சீனிவாச திருக்கல்யாணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 18ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோ, 19ஆம் தேதி சியாட்டில், 25ஆம் தேதி டல்லாஸ், 26ஆம் தேதி செயின்ட் லூயிஸ், 30ஆம் தேதி சிகாகோ, ஜூலை 2ஆம் தேதி நியூ ஆர்லியன்ஸ் நகரத்தில் சீனிவாச கல்யாணம் நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி வாஷிங்டன், 9ஆம் தேதி அட்லாண்டா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. சாமி திருக்கல்யாண ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

கல்யாண உற்சவம்
திருக்கல்யாண உற்சவத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகள் குறித்து தேவஸ்தான அதிகாரிகள் விரிவான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கான கல்யாண உற்சவம் டிக்கெட்டுகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications