வாடா மாரியப்பா.. எப்படி இருக்கே?.. பிடிக்க வந்த கும்கியிடம் கொஞ்சிக் குலாவிய சின்னத்தம்பி!!!
திருப்பூரில் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையான மாரியப்பனிடம் சின்னத்தம்பி யானை மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது.
திருப்பூர்: திருப்பூரில் தன்னை பிடிக்க வந்த கும்கி யானையான மாரியப்பனிடம் சின்னத்தம்பி யானை மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது.
திருப்பூரில் சுற்றி திரியும் ஒற்றையானையான சின்னத்தம்பி தற்போது அமராவதி கிராமத்திற்குள் வலம் வந்து கொண்டு இருக்கிறது. சின்னத்தம்பி யானை அமராவதி கிராமத்திற்குள் சென்றுள்ளது.
அமராவதி சர்க்கரை ஆலைக்கு பின் சின்னத்தம்பி சுற்றி வருகிறது. சர்க்கரை ஆலையில் உள்ள கரும்புகளை தின்றுவிட்டு, அதற்கு பின் இருக்கும் குட்டையில் இது ஓய்வு எடுத்து வருகிறது. இதை பிடிக்க வனத்துறை அதிகாரிகள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
என்ன செய்கிறது
இன்று மதியத்தில் இருந்து அங்கு இருக்கும் குட்டையில்தான் சின்னத்தம்பி தூங்கிக் கொண்டு இருந்தது. சரியாக 5 மணி வாக்கில் சின்னத்தம்பி தூக்கத்தில் இருந்து எழுந்தது. தற்போது மிகவும் மெதுவாக அந்த இடத்தை சின்னதம்பி யானை சுற்றி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
இரண்டு கும்கி
இந்த சின்னதம்பியை பிடிக்க இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று மாரியப்பன் யானை, இன்னொன்று கலீம் யானை. இந்த இரண்டு யானைகளும்தான் முதலில் சின்னத்தம்பியை டாப்சிலிப் கொண்டு செல்ல உதவியது. தற்போது அதே யானைகளை மீண்டும் சின்னத்தம்பியை பிடிக்க வரவழைத்து இருக்கிறார்கள்.
மிகவும் மூர்க்கம்
இந்த இரண்டு யானைகளும் மிகவும் மூர்க்கமான யானைகள் ஆகும். முக்கியமாக மாரியப்பன் யானை மிகவும் கோவக்கார கும்கி யானை என்று கூறப்படுகிறது. சின்னத்தம்பி ஒற்றை யானை என்பதாலும், தற்போது மிகவும் மோசமான மனநிலையில் இருப்பதாலும், இரண்டு கும்கி யானைகள் மூலம் இதை பிடிக்க முடியுமா, இல்லை சிக்கல் ஏற்படுமா என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.
பழக்கம்
இந்த நிலையில் தன்னை பிடிக்க வந்த மாரியப்பனிடம் சின்னத்தம்பி மிகவும் சகஜமாக பழகி இருக்கிறது. இன்று மாலைதான் அமராவதி பகுதிக்கு மாரியப்பன் கொண்டு வரப்பட்டது. அப்போது மாறியப்பனிடம் சின்னத்தம்பி சிறிது நேரம் பழகியது. அதன்பின் மீண்டும் குட்டையில் தூங்க தொடங்கியது குறிப்பிடத்தக்கது. தற்போது அமராவதி வயல் பகுதியில் சின்னத்தம்பி சுற்றிக்கொண்டு இருக்கிறது.