மாஸ் காட்டிய மா.செ.க்கள்.. திருப்பூரில் தமாஸ் ஆன திமுக கூட்டம்! காலி சேர்கள் முன் அமைச்சர்கள் உரை!
திருப்பூர்: தமிழ்நாடு முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை நடத்த திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்த நிலையில் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் அதனை மிக பிரம்மாண்டமாக நடத்தி மாஸ் காட்டினர். ஆனால் திருப்பூரில் நடைபெற்ற கூட்டமோ சமூக வலைதளங்களில் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. இரு அமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் நெடுஞ்சாலையின் குறுக்கே மேடை, 6000 இருக்கைகள் அமைக்கப்பட்ட நிலையில், வெறும் இருநூறு பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான இருக்கைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வரும் திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை ஆரம்பித்து உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தி உள்ளது. தொடர்ந்து திமுக மாவட்டச் செயலாளர்கள், அமைச்சர்களை அடிக்கடி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார் தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின்.
அந்த வகையில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற முழக்கத்தை முன்னெடுத்திருக்கிறார். மேலும் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான விளக்கப் பொதுக் கூட்டங்களை தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டார் ஸ்டாலின்.

ஓரணியில் தமிழ்நாடு
இதை அடுத்து திமுகவின் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி மாவட்டங்களில் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் என்ற தலைப்பில் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடைபெற்றன. ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்களும் கிட்டத்தட்ட மினி மாநாடு போலவே அந்தப் பொதுக் கூட்டங்களை நடத்தினர். சமூக வலைதளங்களிலும் அந்தக் கூட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அந்தப் புகைப்படங்களைப் பகிர்ந்திருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்திருந்தார்.
திருப்பூர் திமுக கூட்டம்
இந்த நிலையில் பிற மாவட்டச் செயலாளர்கள் மாஸ் காட்ட திருப்பூரில் நடைபெற்ற கூட்டம் கேலி கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறது. திருப்பூர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் பொதுக்கூட்டம் தாராபுரம் புது காவல் நிலைய வீதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதனும், மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்துகொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
காலி இருக்கைகள்
மற்ற மாவட்டங்களைப் போலவே மிகப் பிரமாண்டமாகப் பொதுக்கூட்டத்தை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன. அந்த நெடுஞ்சாலையில் 6000-க்கும் மேற்பட்ட இருக்கைகள் அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்றன. ஏராளமான பொதுமக்கள் கூடுவார்கள் எனப் பாதுகாப்புப் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். ஆனால் கூட்டம் தொடங்கி சில மணி நேரம் ஆகியும் வெகு சிலரே கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
திமுக
கிட்டத்தட்ட 6000 பேருக்கு இருக்கை அமைக்கப்பட்ட நிலையில் 200 முதல் 300 பேர் வரை மட்டுமே அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் பெரும்பாலான சேர்கள் மக்கள் இன்றி காலியாகக் காட்சியளித்தன. அமைச்சர்கள் பேசத் தொடங்கியதும் அங்கிருந்த சிலரும் கிளம்பிச் சென்றதால் அங்கிருந்த இருக்கைகள் அனைத்தும் காலியாகின. இதனால் காலி இருக்கைகளைப் பார்த்துப் பேச வேண்டிய நிலை அமைச்சர்களுக்கு ஏற்பட்டது. இருந்தபோதும் மேடையில் இருப்பவர்களை வைத்துச் சமாளித்துக் கூட்டத்தை ஒரு வழியாக நடத்தி முடித்தனர் திமுகவினர். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications