திருப்பூரில் அரசு பள்ளி மாணவிகள் ரோட்டிலேயே கட்டிப்புரண்டு.. திகைத்த மக்கள்! யாரும் கிட்ட போக முடியல
திருப்பூர்: கல்லூரிகளில் மட்டுமே நடந்து வந்த ஈகோ பிரச்சனை, பள்ளிகளிலும் புகுந்து விட்டது.. அதிலும் மாணவிகளிடையே யார் பெரிய ஆள்? என்ற கெத்து தலைதூக்கி வருகிறது. சோஷியல் மீடியாவில் தொடங்கிய இந்த தகராறு, தற்போது பொதுவெளியிலேயே மக்கள் முன்பு அரங்கேறியிருக்கிறது. திருப்பூரில் நடந்த இந்த சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியையும் தந்து வருகிறது.
"ரூட் தல" என்பது சென்னை நகரத்தில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களிடம் நிலவும் கலாச்சாரமாகும்.. நான்தான் பெரியவன் என்ற ஈகோ மாணவர்களுக்குள் தலைதூக்கிவிடுவதால், அது மோதலில் முடிந்துவிடும். கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் இடையே ஏற்படும் இந்த மோதல்களையே ரூட் தல என்பார்கள்..

அதாவது, குறிப்பிட்ட பஸ் ரூட்டை யார் கட்டுப்படுத்துவது அல்லது ஒரு குறிப்பிட்ட பகுதியை யார் கட்டுப்படுத்துவது போன்ற காரணங்களால் இந்த மோதல் வெடிக்கிறது.. . இந்த மோதல்களில் ஈடுபடும் மாணவர்கள் தங்களை "ரூட் தல" என்று அழைத்துக் கொள்வார்கள்..
யார் பெரியவன்
இதனால் கல்லூரிக்கு செல்லும்போதே சில மாணவர்கள், அரிவாள், கத்தி போன்றவற்றை கையுடன் கொண்டு செல்லும் போக்கும் அதிகரித்தது.. இது பஸ்களில் பயணிக்கும் பயணிகளுக்கும் அச்சத்தை தந்தது.. தற்போது, சென்னை போலீசார் இந்த கலாச்சாரத்தை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.. இப்படி கல்லூரி மாணவர்களிடையே நடக்கும் ரூட் தல கலாச்சாரம்போல மாணவிகளிடம், அதுவும் பள்ளி மாணவிகளிடம் "யார் கெத்து?" என்ற பிரச்சனை வெடித்துள்ளது.
திருப்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 2 மாணவிகள் வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

மாணவிகள் தகராறு
பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குரூப் ஆரம்பித்துள்ளனர்.. பிறகு சோஷியல் மீடியாவில் தாங்கள் தான் கெத்து என்ற பாணியில் போஸ்ட்களை பதிவிட்டு வந்தனர்..
இந்த மாணவிகளை போலவே, திருப்பூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கணபதிபாளையம் அரசு பள்ளி மாணவிகளும் இதுபோலவே குழு சேர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவுகளை போட்டு வந்துள்ளனர். இதில் 2 பள்ளிகளுக்கும் இடையில் நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்ற ரீதியில் போஸ்ட்களை பதிவிட்டு வந்தனர்.. நாளடைவில் இவர்களுக்குள் சோஷியல் மீடியாவிலேயே தகராறு முற்றியது..
2 தரப்பினரும் சண்டை
இதனால் ஆத்திரமடைந்த திருப்பூர் பள்ளி மாணவிகள் சுமார் 50-க்கும் மேற்பட்டவர்கள் சம்பவத்தன்று மாலை பள்ளி முடிந்ததும், பஸ் ஏறி 10 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கணபதிபாளையம் பள்ளி முன்பு நின்று கொண்டனர்.. அங்கு வந்த மாணவிகளை, இங்கிருந்து சென்ற மாணவிகள் கேள்விகள் கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
நடுரோட்டிலேயே இரு தரப்பினருமே கட்டிப்புரண்டு சண்டை போட்டுக் கொண்டார்கள்.. இதில் சில பெண்கள் தங்கள் முகத்தை மறைத்து கொண்டனர்.. பல பெண்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் அடித்து உதைத்து தாக்கினர்.. இதனால், சாலை முழுவதுமே மாணவிகளின் அடிதடியாக காணப்பட்டது..
அதிர்ச்சி அடைந்த மக்கள்
இதைப்பார்த்து பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.. ஒருசிலர் மாணவிகளை தடுக்க முயன்றனர்.. ஆனால், தங்களை தடுக்க வந்தவர்களிடமும் மாணவிகள் சண்டை போட்டார்கள்.. பிறகு உடனடியாக போலீசுக்கு தகவல் தரப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து, தகராறில் ஈடுபட்ட அனைத்து மாணவிகளின் பெற்றோரையும் வரவழைத்து பேசினார்கள்.. பிறகு மாணவிகளுக்கு புத்தி சொல்லி , பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.. மாணவிகள் ஒருவரையொருவர் தாக்கி கொண்டு, நடுரோட்டில் கட்டிப்புரளும் வீடியோ சோஷியல் மீடியாவில் பரவி கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications