சாலையை கடக்கும் போது கவனமாக போகனும்.. இல்லாட்டி இப்படித்தான்.. அதிர வைக்கும் சிசிடிவி காட்சி !
திருப்பூர்: சாலையை கடக்கும் போது கவனமாக இல்லாவிட்டால் பெரும் விபத்து ஏற்படும் சூழல் இருக்கிறது. திருப்பூரில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்ற பெண் மீது மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாக சென்ற காரை சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
Recommended Video
சாலையில் செல்வோர் கவனமாக செல்ல வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம். நாம் சரியாக சென்றாலும் எதிரே வருபவர் சரியாக வருவாரா என்பதை உறுதியாக சொல்ல முடியாது.
அதேபோல் சாலையை கடக்கும் போதும், கவனமாக கடக்க வேண்டும். வேலைக்கு செல்லும் அவசரத்திலோ அல்லது ஏதேனும் ஒரு விஷயத்தை வேடிக்கை பார்த்தபடி சாலையை கடந்தால் பெரும் விபத்தில் சிக்கும் அவலங்கள் ஏற்படும். அப்படித்தான் திருப்பூரில் ஒரு பெண் மீது கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார்.

தினக்கூலி வேலை
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் காமராஜர் நகர் பகுதியில் வசித்து வருபவர் கதிர்வேல் மற்றும் அவரது மனைவி மாலதி. இருவரும் பனியன் நிறுவனத்தில் தினக்கூலி வேலைக்கு சென்று வருகிறார்கள். இந்நிலையில் நேற்று மாலை மாலதி பனியன் நிறுவனத்தில் இருந்து பணிகளை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக காமராஜர் நகர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில், சேவூரில் இருந்து அவிநாசி நோக்கி வந்து கொண்டிருந்த காரை கவனிக்காமல் சாலையை கடக்க முயன்றுள்ளார்.

கார் மோதியது
அதி வேகமாக வந்த கார் மாலதியின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் மாலதி பலத்த காயம் ஏற்பட்டு அவிநாசி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் உயர் சிகிச்சைக்காக திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் மீது மோதிவிட்டு அதிவேகமாக சென்ற காரை சிசிடிவி காட்சிகளை வைத்து அவிநாசி போலீசார் தேடி வருகின்றனர்.

மூன்று பேர் பலி
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தின் மீது மோதிவிடாமல் இருக்க ஆட்டோவை கட்டுபடுத்த முயன்ற போது வலதுபக்கம் சாலையின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த 6 பயணிகளில், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஐசக்ராஜ்(51), உத்திரமேரூரை சேர்ந்த சுந்தரராஜன்(37), பாண்டிச்சேரியை சேர்ந்த நாகமுத்து(36), ஆகிய மூன்று பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

யார் யார் காயம்
மேலும் ஆட்டோவில் பயணித்த, கட்டிட வேலை செய்யும் திருவண்ணாமலையை சேர்ந்த ஏழுமலை(65), அதே பகுதியை சேர்ந்த ஆனந்தகுமார் ஆனந்த்குமார்(27), பெருங்களத்தூரை சேர்ந்த ரஜினிகாந்த் (வயது-45) ஆகிய மூவருக்கு முகம், நெற்றி, மூக்கு என பலத்த காயத்தோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திவிட்டு ஆட்டோ ஓட்டுநர் தப்பியோடி விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications