பருவமழை ஓய்ந்தபிறகு.. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படும்.. கனிமொழி எம்.பி உறுதி!
திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து கட்டியது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. உள் மண்டபத்தில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியது. தூத்துக்குடி நகரில் பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனிமொழி எம்.பி ஆய்வு
இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கிரி பிரகாரம் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த பணிகளை தூத்துக்குடி எம்.பி கனிமொழி, தமிழக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி நிருபர்களிடம் பேட்டியளித்தபோது கூறியதாவது;-

நீர்நிலைகள் தூர்வாரப்படும்
மழை காலத்திற்கு பிறகு தமிழகம் முழுவதும் நீர் வரக்கூடிய கால்வாய்கள், குளங்கள், ஏரிகள் போன்றவை தூர் வாரப்பட்டு நிரந்தரமாக தீர்வு காணப்படும். மழை காலத்தில் பாதுகாப்பான இடங்களில் பொது மக்களை தங்க வைப்பதும், அவசர பணிகளை மேற்கொள்வதற்கும் உரிய பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை பெய்த 16 இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று 11 இடங்களில் பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இதில் 300 முதல் 400 வரை பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு அறிவுரை
அவர்களுக்கு வேண்டிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 67 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 36 இடங்கள் தாழ்வான பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. அந்த பகுதி பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video

சடையன் ஏரி கால்வாய்
மழை காலத்திற்கு பிறகு சடையன் ஏரி கால்வாயை நிரந்தர கால்வாயாக மாற்றுவதற்கு தீர்வு காணப்படும். கடம்பா குளத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. ஷட்டரை சரிசெய்வதற்கு முதல் கட்டமாக கற்கள் மற்றும் மணல் மூடைகளை கொண்டு சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கனிமொழி எம்.பி கூறினார்.












Click it and Unblock the Notifications