திருச்சி டிஎஸ்பி மீது பிரதமர் அலுவலகம் வரை பறந்த புகார்! காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி!
திருச்சி: திருச்சி புறநகரில் பணியாற்றிய டி.எஸ்.பி. ஒருவர் மீது பிரதமர் அலுவலகம் வரை பெண் போலீஸ் ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து, அந்த டிஎஸ்பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கடந்த மே மாதம் 19ஆம் தேதி அன்று திருச்சி சரக போலீஸ் வாட்ஸ் அப் குழுவில் ஆபாசமான அருவருக்கத்தக்க படங்களை அனுப்பிவிட்டு சில நிமிடங்களில் அதை டெலிட் ஃபார் எவரி ஒன் என்ற ஆப்ஷனின் கீழ் அழித்ததாக அந்த டி.எஸ்.பி. மீது புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இதுமட்டுமல்லாமல் பெண் போலீஸார் சிலருக்கு ஆபாச படங்களை அவர் அனுப்பியுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூத்த அமைச்சர் ஒருவரது ஆதரவு அந்த டி.எஸ்.பி.க்கு இருப்பதால் அவர் மீதான தங்கள் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே புகாருக்குள்ளான டி.எஸ்.பி.யை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக முதல்வர் அலுவலகம், தலைமைச் செயலாளர், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உட்பட அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் புகாராக அளிக்கப்பட்டுள்ளதால் இது மேலும் விஸ்வரூபம் எடுக்கும் எனத் தெரிகிறது.
வில்லங்கமான புகாருக்கு ஆளாகியிருக்கும் இந்த டி.எஸ்.பி.யை, மூத்த அமைச்சர் ஒருவர் அண்மையில் ஆஹா ஓஹோ என பெருமைப் பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. பெண் போலீஸார் அளித்துள்ள புகாரின் மீது முகாந்திரம் இருந்ததன் காரணமாகவே அந்த டி.எஸ்.பி. கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications