"உங்கள் வீட்டின் பொறுப்பான செல்லப்பிள்ளை" அதுதான் எப்போதும் பெருமை.. திருச்சியில் உதயநிதி ஸ்டாலின்!
திருச்சி: இளைஞரணி செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், திமுக தலைவரின் மகன், கருணாநிதியின் பேரன் என பல்வேறு தருணங்களில் திருச்சி வந்திருக்கிறேன். இந்த பெருமைகளை விடவும், எப்போதும் உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதிலேயே அதிக பெருமை கொள்வதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தற்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதால், பொறுப்பான செல்லப்பிள்ளையாக இருக்க விரும்புவதாக உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சுற்றுப்பயணம் செல்ல தொடங்கியிருக்கிறார். தென்காசி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைத் தொடர்ந்து, நீண்ட நாட்களுக்கு பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சிக்கு வந்தார்.
அவருடன் புதிதாக அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினும் வந்தார். இதனால் உற்சாகமடைந்த திமுகவினர், விமான நிலையத்தில் இருந்து விழா நடக்கும் அரங்கம் வரை பிரம்மாண்ட வரவேற்பை அளித்தனர்.
துணை முதலமைச்சர் பதவிக்கு நிகரான பொறுப்பை கையாள்கிறார் உதயநிதி ஸ்டாலின்! அன்பில் மகேஷ் பேச்சு!
திருச்சி வந்த முதல்வர்
தொடர்ந்து அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 2,764 மகளிர் சுயஉதவிக் குழுக்களின் 54,654 பயனாளிகள் பயன்பெறும் வகையில் ரூ.78 கோடி வங்கிக் கடன் இணைப்பு மற்றும் இதர பயன்களையும், 33 சமுதாய அமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகளையும், 8 வங்கிகளுக்கு மாநில அளவிலான வங்கியாளர் விருதுகளையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
உதயநிதி ஸ்டாலின் பேச்சு
இந்த நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், நான் திருச்சிக்கு பலமுறை வந்திருக்கிறேன். கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன். இப்போது முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் திருச்சிக்கு வந்திருக்கிறேன். முதல்வருடன் விமான நிலையத்திலிருந்து, விழா நடைபெறும் இடம் வரை வழிநெடுகிலும் மக்கள் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி போட்ட விதை
முன்னாள் முதல்வர் கருணாநிதி 1987ல் தர்மபுரி மாவட்டத்தில் மகளிர் சுயஉதவி குழு இயக்கத்துக்கு முதன் முதலாக விதை போட்டார். 1996ல் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தபோது, இந்த திட்டம் மற்ற மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்யப்பட்டது. தமிழகத்தில் தற்போது நான்கு லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. 2021-22 ல் மட்டும் 16 ஆயிரம் புதிய குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மகளிர் திட்டத்திற்கு என தனியாக ஒரு தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டு அதற்கு அன்னை தெரசா என கருணாநிதி பெயர் சூட்டினார்.
மகளிர் சுயஉதவி திட்டம்
இந்தத் திட்டம் இன்றைக்கு இந்தியாவிற்கு ஒரு முன்னோடி திட்டமாக திகழ்ந்து வருகிறது. அதே போன்று 2021ல் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் 16 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் ரூ.2,00,800 கோடி சுய உதவி குழு கடன்களை தள்ளுபடி செய்தார். இந்த அரசானது பெண்களின் நலன் காக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. இந்த திமுக ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது மற்ற மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து
2021 தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயணத்துக்கு அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் இது சாத்தியமில்லை என்றார்கள். ஆனால் 2021ல் ஆட்சிக்கு வந்தவுடன் மகளிருக்கு நகர பேருந்துகளில் கட்டணம் இல்லா பயண திட்டம் அமல்படுத்தப்பட்டது. இன்றைக்கு பெண்கள் 100 கோடி முறை பயணம் செய்து பல லட்சக்கணக்கானோர் பயனடைந்துள்ளார்கள்.
புதுமைப் பெண் திட்டம்
அதே போன்று புதுமைப் பெண் திட்டத்தின் வாயிலாக மாணவிகளின் மேற்கல்விக்கு மாதந்தோறும் ரூ.1,000 வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. 2021-22 ஆண்டுகளில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதற்கு மேலாக ரூ.21,392 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 2023 மார்ச் மாதத்துக்குள் 25 ஆயிரம் கோடி கடன் இணைப்புகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திருச்சியில் உதயநிதி
தமிழக முதலமைச்சரின் உழைப்பே இந்த இடத்துக்கு அவரை எடுத்துச் சென்றிருக்கிறது. அதேபோன்று கடன் பெறும் நீங்களும் நன்கு உழைத்து வெற்றி பெற வேண்டும். இளைஞரணி செயலாளராக வந்திருக்கிறேன், சட்டமன்ற உறுப்பினராக வந்திருக்கிறேன், திமுக தலைவரின் மகனாக வந்திருக்கிறேன், கருணாநிதியின் பேரனாகவும் வந்திருக்கிறேன்.
பொறுப்பான செல்லப்பிள்ளை
இந்த பெருமையை விட, உங்கள் வீட்டு செல்லப் பிள்ளையாக இருப்பதில் மட்டுமே அதிக பெருமைக் கொள்கிறேன். இப்போது அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதா, செல்லப்பிள்ளையாக மட்டுமல்லாமல் பொறுப்பான செல்லப்பிள்ளையாக என்றும் இருப்பேன் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.