ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லை? அண்ணாமலை சூசகம்
திருச்சி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை என்பதை அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் எந்த கட்சி போட்டியிடும் என்பது உறுதியாகவில்லை. அதிமுகவின் இபிஎஸ் கோஷ்டி, போட்டியிட விரும்புவோரிடம் விருப்ப மனுவை பெற்று வருகிறது. அதிமுகவின் ஓபிஎஸ் கோஷ்டி, தாங்கள் போட்டியிடுவோம் அல்லது பாஜக போட்டியிட்டால் ஆதரிப்போம் என கூறியுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், இத்தொகுதியில் அதிமுக போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே தமாகா போட்டியிட்டது. இருப்பினும் அதிமுக போட்டியிட ஆதரவு தருவதாக அக்கட்சித் தலைவர் ஜிகே வாசன் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பாஜகவின் ஆதரவைப் பெற அதிமுகவின் இரு கோஷ்டிகளுமே படையெடுத்தனர். அதேநேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக பாஜகவும் ஆலோசனை நடத்தியது. பாஜகவின் பெரும்பான்மை தலைவர்கள், இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்திருந்தனர்.
இந்நிலையில் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை. அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எங்கள் கூட்டணியில் அதிமுகதான் பெரிய கட்சி. ஈரோட்டில் ஏற்கனவே அதிமுகவினர் வெற்றி பெற்றுள்ளனர். அந்த கட்சியில் முன்னாள் அமைச்சர்கள் பலரும் உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்தான் முக்கியம். அனைவரும் கூட்டணி தர்மப்படி நடந்து கொள்ள வேண்டும். ஏனெனில் கூட்டணிக்கு என ஒரு மரபு, தர்மம் உள்ளது. பொதுவாக இடைத்தேர்தல் என்பது கட்சிகளின் பலத்தை காட்டக் கூடியது. அடுத்த சில நாட்களில் அனைத்தும் நல்ல முடிவுக்கு வரும் என்றார். அதாவது ஈரோடு கிழக்கு தொகுதியில் பாஜக போட்டியிட வாய்ப்பில்லை என்பதையே அண்ணாமலை மறைமுகமாக குறிப்பிடுவதாகவே அவரது திருச்சி பேட்டி இருப்பதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications