"ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்தால் பின் விளைவுகள் வரும்" திமுகவுக்கு எச்.ராஜா எச்சரிக்கை!
திருச்சி: திமுகவினர் ஆளுநர் ஆர்.என்.ரவியை தொடர்ந்து எதிர்த்தால் பின் விளைவுளை சந்திக்க நேரிடும் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு வழங்கிய உரையில் தவறான தகவல்கள் இருந்ததாகவும், பொய்யான தகவல்களை படிக்காத ஆளுநரை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சில வாசகங்களை சேர்த்தும், பல வார்த்தைகளை விடுத்தும் உரையாற்றியது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து புகார் அளித்துள்ளது.
அதேபோல் அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆளுநருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஆளுநருக்கு வழங்கிய உரையில் தமிழ்நாடு அரசு தவறான தகவல்களை அளித்ததாக விமர்சித்து வருகின்றனர்.

எச்.ராஜா பேட்டி
இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா கூறுகையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழ்நாட்டில் கஞ்சா அதிகமாக காவல்துறையினரால் பிடிக்கப்பட்டு வருகிறது.

அமைதி பூங்கா
அதேபோல் கோவையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக பிரமுகர்களின் 18 பேர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படி பல சம்பவங்கள் நடந்து சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. அதனால் நாகரீகமாக அரசுக்கு தர்மசங்கடம் கொடுக்க கூடாது என்பதால், அதனை தவிர்த்துள்ளார்.

அந்நிய முதலீடு
இதற்கு நியாயமாக ஆளுநருக்கு நன்றி கூறி இருக்க வேண்டும். அதேபோல் தமிழ்நாடு அந்நிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் கடந்த ஆண்டு 18 பில்லியன் டாலரும், மகாராஷ்டிராவில் 11.6 பில்லியன் டாலரும் அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்திற்கு 2.5 பில்லியன் டாலர் மட்டுமே அந்நிய முதலீடு வந்துள்ளது.

தவறான தகவல்கள்
இவ்வாறாக உண்மைக்கு புறம்பான தகவல்களை ஆளுநர் உரையில் கூறிவிட்டு படிக்கச் சொன்னால் ஆளுநர் எப்படி படிப்பார். இந்த விவகாரத்தில் தவறான தகவல்களை என்னால் படிக்க முடியாது என்று கூறிய ஆளுநரின் நேர்மையை பாராட்ட வேண்டும். அதுமட்டுமல்லாமல், ஆளுநரிடம் உரையை கொண்டு சென்றவர்கள், ஆளுநர் உரை அச்சிற்கு சென்றுள்ளது. அதனால் எது தவறாக நினைக்கிறீர்களோ, அதனை தவிர்க்கலாம் என்றும் கூறியுள்ளனர். இந்த சம்பவம் மாநில அரசின் சம்மதத்துடன் மட்டுமே நடந்திருக்கிறது.

திமுகவுக்கு எச்சரிக்கை
ஆனால் ஆளுநரை கண்டித்து வருகின்றனர். தற்போது ஆளுநரை கண்டித்து பேசக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். நிலைமையை புரிந்ததனால் முதலமைச்சர் அவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து ஆளுநரை எதிர்த்தால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும். திமுகவினர் ஆளுநரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டால் அவர்களது அரசை காப்பாற்றிக் கொள்ளலாம். அதனால் திமுகவினர் ஆளுநர் பற்றி பேச வேண்டாம் என்று எச்சரிக்கிறேன் என்று தெரிவித்தார்.

பொங்கல் பண்டிகை
தொடர்ந்து, சித்திரை தான் நமக்கு தமிழ் புத்தாண்டு. பொங்கல் பண்டிகை இந்துக்கள் பண்டிகை. இது நாடு முழுவதும் பல்வேறு பெயர்களில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஞ்சுவிரட்டு, ஏர் தழுவுதல் எல்லாம் நமது பாரம்பரிய விழாக்கள் ஆகும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications