கஞ்சா, மது போதைக்கு அடிமையாகி ஆடு திருடிய சிறுவர்கள்... - பூமிநாதன் கொலையில் வெளியான பகீர் தகவல்கள்
எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி: எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவர்கள் கஞ்சா, மது போதைக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது. மது போதைக்காக பணம் தேவைப்படவே ஆடுகளை திருடி விற்றுள்ளனர். போலீசில் சிக்கிய உடன் தப்பிப்பதற்காக கொலை செய்துள்ளனர். மது, போதை, திருட்டு கொலை என சிறுவர்களின் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து விட்டது.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு காவல் நிலையத்தில் எஸ்.ஐ-யாகப் பணியாற்றி வந்தவர் பூமிநாதன். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வழக்கம் போல் நவல்பட்டு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். அப்போது, நான்கு பேர் கொண்ட கும்பல் இரண்டு இருசக்கர வாகனங்களில் ஆடுகளுடன் அந்தப்பக்கமாக வந்தனர்.
இதைப் பார்த்த எஸ்.ஐ பூமிநாதன் அந்த நபர்களைத் தடுத்து நிறுத்தியிருக்கிறார். ஆனால், அவர்கள் இருசக்கர வாகனங்களை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் செல்லவே, அவர்கள் ஆடு திருடர்களாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்ட பூமிநாதன் தனது வாகனத்தில் விரட்டி சென்றார்.
திருச்சி எஸ்எஸ்ஐ பூமிநாதன் கொலை செய்யப்பட்டது எப்படி?.. திருச்சி டிஐஜி பரபரப்பு தகவல்
விரட்டிப்பிடித்த பூமிநாதன்
போகும் வழியிலேயே தனது வாக்கி டாக்கியில் சக காவல்துறையினருக்கு தகவலைச் சொல்லிவிட்டு சென்றார் பூமிநாதன், திருச்சி - புதுக்கோட்டை, களமாவூர் ரயில்வே கேட் பகுதியிலிருக்கும் பள்ளப்பட்டி என்ற கிராமத்திற்கு அருகே இருசக்கர வாகனத்தில் இருந்த இருவரை மடக்கிப் பிடித்தார். இருவருமே சிறுவர்களாக இருக்கவே, இந்தத் தகவலை உடனே நவல்பட்டு காவல்துறையினருக்கும் தெரிவித்திருக்கிறார்.
வெட்டிக்கொலை
அப்போது பின்தொடர்ந்து வந்த ஆடு திருடர்கள், இருவரையும் விட்டுவிடுமாறு எஸ்.ஐ பூமிநாதனை மிரட்டினர். அதற்கு பூமிநாதன் முடியாது என்று சொல்லிவிட்டு பிடிபட்ட இளைஞரின் பாட்டிக்கு செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தார் பூமிநாதன். தங்களின் திருட்டுச் செயல் வீட்டிற்கு தெரிந்து விடுமோ என பயந்த இளைஞர் தனது பைக்கில் இருந்த அரிவாளை எடுத்து சிறப்பு எஸ்.ஐ.யின் தலையில் சராமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த எஸ்எஸ்.ஐ பூமிநாதன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
சிறுவர்கள் கைது
எஸ்.ஐயின் பின்தலையில் மண்டை ஓடு உடையும் அளவிலான கூர்மையான, தடிமனான ஆயுதத்தால் தாக்கியதால் அவரின் மண்டை ஓடு உடைந்திருக்கிறது என்று மருத்துவர்கள் தரப்பில் சொல்லியிருக்கிறார்கள். பூமிநாதன் கொலை வழக்கில் தஞ்சை மாவட்டம் கல்லணை தோகூரைச் சேர்ந்த 19 வயது இளைஞர் மணிகண்டன் மற்றும் 4ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுவன், 9ம் வகுப்பு மாணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
போதைக்கு அடிமையான சிறுவர்கள்
இதனிடையே எஸ்எஸ்ஐ கொலை வழக்கில் கைதான மூவரும் கஞ்சா, மதுவிற்கு அடிமையானவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. போதைக்கு அடிமையானதால் ஆடுகளை திருடி விற்று அதில் வரும் பணத்தில் போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியுள்ளனர். இதில் 4ம் வகுப்பு மாணவனின் சகோதரியைதான் மணிகண்டன் திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது ஏற்கெனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பது விசாரணையின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சிறப்பு எஸ்எஸ்.ஐ.யை கொன்ற இந்த மூவர் மீதும் 302 பிரிவின் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்காணிப்பு தேவை
செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சரக டிஐஜி, கொலையில் ஈடுபட்ட சிறுவர்கள் சிசிடிவி காட்சிகள் உதவியால் கைது செய்யப்பட்டதாகவும் காவல் அதிகாரியை பின்புறமாக இருந்து மூவரும் தாக்கியதாகவும் தெரிவித்தார். சிறுவர்களை பெற்றோர்கள் கண்காணிப்புடன் வளர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மது, போதை, திருட்டு கொலை என சிறுவர்களின் குற்றச்செயல்கள் தற்போது அதிகரித்து விட்டது.
துப்பாக்கியுடன் செல்லுங்கள்
இதனிடையே நவல்பட்டுவில் மறைந்த பூமிநாதன் படத்திற்கு டிஜிபி சைலேந்திரபாபு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, ரோந்து பணிக்கு செல்லும்போது துப்பாக்கியுடன் செல்ல காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார். தேவைப்பட்டால் தற்காப்புக்காக ஆயுதத்தை பயன்படுத்தலாம் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் சைலேந்திர பாபு கூறியுள்ளார்.