ஸ்ரீரங்கம் கோவில் எதிரே ‘கடவுள் இல்லைனு’ சொன்னவர் சிலை! அதை உடைக்கனும்! தனலை கிளப்பிய கனல் கண்ணன்..!
திருச்சி : உலகப் புகழ் பெற்ற திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் முன்பு இருக்கும் கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்றைக்கு உடைக்கப்படுகிறதோ அன்றுதான் ஹிந்துக்களின் உண்மையான எழுச்சி நாள் என்று சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பேசி இருப்பது பெரும் பரபரப்பையும் சமூக வலைதளங்களில் விவாதத்தையும் ஒரு சேர உருவாக்கி இருக்கிறது.
Recommended Video
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெரியார் சிலைகள் திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த சிலைகள் அடிக்கடி சேதப்படுத்தப்படுவது, அவமரியாதை செய்யப்படுவது உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க அந்த சிலைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சினிமா ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் பெரியார் சிலையை குறிப்பிட்டு அவதூறாக பேசியுள்ளது சமூக வலைதளங்களில் கண்டனங்களை பெற்றுள்ளது.

பெரியார் சிலை
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் முன்பு கடவுள் இல்லை என்று சொல்பவரின் சிலை இருக்கிறது அந்த சிலையை உடைத்தால் தான் இந்துக்களின் எழுச்சி நாள் என பேசி இருக்கிறார். ஸ்ரீரங்கம் கோயில் எதிரே பெரியார் சிலை தான் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது இந்த விவகாரத்தின் முழு பின்னணி குறித்து பார்க்கலாம்.

இந்து முன்னணி
இந்துக்களின் உரிமை மீட்பு பிரச்சாரப் பயணம் என்ற பெயரில் இந்து முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சுற்றுப்பயணம் மற்றும் பிரச்சார பொதுக் கூட்டங்கள் நடைபெற்று வருகிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை பல்வேறு இடங்களில் இந்த பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில் அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது.

கனல் கண்ணன்
இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டரும் இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய மாநில செயலாளர் கனல் கண்ணன் கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் பேசிய அவர் ஒரு நாளைக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் லட்சக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர் அவ்வாறு தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது கோவிலின் முன்பாக கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை இருக்கிறது அந்த சிலை என்று உடைக்கப்படுகிறதோ அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள் என கூறியிருந்தார்.

சர்ச்சைப் பேச்சு
ஸ்ரீரங்கம் கோவில் முன்பு பெரியாரின் சிலை தான் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற கனல் கண்ணனின் பேச்சுக்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பெரியாரின் சிலையை உடைப்பதோடு சமூகத்தில் இரு தரப்பினருக்கிடையே அவதூறு உருவாக்கும் வகையிலும் கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியுள்ள கனல் கண்ணனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்து வருகிறது.

கடும் கண்டனம்
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தந்தை பெரியார் சிலை சிலையை உடைக்க வேண்டும் என வன்முறையை தூண்டிவிடும் நோக்கத்தில் பேசிய திரைப்பட சண்டை இயக்குனர் கண்ணனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதே போல பலரும் கனல் கண்ணனுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டுள்ள நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.












Click it and Unblock the Notifications