வெட்ட வெயில்.. அப்படியே "பில்டிங் மேலே" எட்டிப் பார்த்தால்.. நெகிழ்ந்து போன எடப்பாடியார்.. நாகையில்
திருச்சி: நாகை மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இன்ப அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.
முதல்வர் பழனிசாமி இன்று தனது இரண்டாம் கட்ட பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். இன்று காலை திருத்துறைப்பூண்டியில் பிரசாரத்தைத் தொடங்கும் அவர் வேதாரண்யம், நாகை, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி, காட்டுமன்னார்கோவில், சிதம்பரம் தொகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்குகளைச் சேகரித்தார்.
நாகை முக்கிய வீதிகளில் வெயில் உச்சிக்கு ஏறியபோது, முதல்வர் பிரச்சாரம் செய்து சென்றபோது திடீரென ஒரு மாடியின் மீது ஆரவாரம் எதிரொலித்தது.
அங்கே யார்
அப்படி அங்கு என்ன சத்தம் வருகிறது.. என்று முதல்வர் மேலேயே திரும்பிப் பார்த்தார்.. அங்கே 10க்கும் மேற்பட்டவர்கள் கையில் பதாகைகளை ஏந்தியபடி நின்றுகொண்டு இருந்தனர்.. சற்று உற்றுப் பார்த்த பிறகு தான் தெரிந்தது ஒவ்வொருவர் கைகளில் உள்ள பதாகைகளிலும் ஒரு தமிழ் எழுத்து இருந்தது. அதை எழுத்துக்கூட்டி படித்துப் பார்த்தால் இப்படி வருகிறது: "எடப்பாடியார்" என்று மேல் வரிசையில் நின்ற ஒரு தரப்பு பதாகைகளை பிடித்திருந்தது. அதற்கு கீழ் வரிசையில் நின்ற தரப்பு "அரியர் பசங்க நாங்க எங்க ஓட்டு இரட்டை இலைக்கே" என்று எழுதப்பட்டிருந்ததை பார்க்க முடிந்தது.
பதாகைகள்
இந்த பதாகையை பார்த்த முதல்வர் அப்படியே நெகிழ்ந்து போய்விட்டார். தனது கட்சியினரை அழைத்து யார் அவர்கள் என்று கேட்டார். இவர்கள் எல்லோரும் கல்லூரி மாணவர்கள்.. அரியர் என்ன ஆகுமோ என்று அச்சத்தில் இருந்தனர்.. நீங்கள் அனைவரும் ஆல் பாஸ் என்று அறிவித்ததால் நன்றி கடனுக்காக இப்படி பதாகைகளை தூக்கியபடி நிற்கிறார்கள் என்று விளக்கமளித்தனர். இதைப்பார்த்த எடப்பாடி அவர்களை நோக்கி கையசைத்து விட்டு.. தனது டிரேட் மார்க் புன்முறுவல் சிரிப்புடன் அங்கிருந்து கடந்து சென்றார்.
ஆல் பாஸ் உத்தரவு
கொரானா நோய் பரவல் காலத்தில் மாணவ மாணவிகள் தேர்வு எழுத சென்று ஆபத்தில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பல்வேறு சலுகைகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். நடப்பு கல்வியாண்டில் கூட 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் ஆல் பாஸ் செய்யப்படுவார்கள் என்று அவர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
மாணவர்கள் மகிழ்ச்சி
கடந்த கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு ரத்து என்று அறிவித்து பெற்றோர்களிடம் நிலவிய பீதியை தணித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. கல்லூரிகளில் அரியர் வைத்திருப்பவர்கள் ஆல் பாஸ் என்று முதல்வர் அறிவித்த நிலையில் அதற்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதி பாஸ் செய்து கொள்ளலாம் என்று பிறகு அறிவிக்கப்பட்ட நிலையில் தான், நோய்தொற்று காலத்தில் தங்களை பாதுகாப்பாக வீட்டில் இருக்க வைத்த முதல்வருக்கு வித்தியாசமாக நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர் மாணவர்கள்.