யாருமே இல்லாத டீக்கடையில் யாருக்குப்பா.. தேமுதிக பரிதாபங்கள்.. திருச்சியில் "திருதிரு சம்பவம்!"
திருச்சி: திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தேமுதிக பொருளாளர் பிரேமலதா பிரச்சாரம் செய்ய வருவதற்கு முன்னர் கட்சியின் பேச்சாளர் ஒருவர் பேசிக் கொண்டிருந்த போது அங்கு தொண்டர்கள் யாரும் இல்லாத நிலையிலும் அரை மணி நேரமாக பிரச்சாரம் செய்த வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் வரும் 16 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் திமுக தலைமையில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.
அதே வேளையில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. நாளையுடன் பிரச்சாரம் ஓய்வதால் இன்றும் நாளையும் வேகமாகவும் விவேகமாகவும் மக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தேயும் தேமுதிக
கடந்த சில தேர்தல்களில் தேமுதிக தேய்ந்து வருகிறது. அதன் வாக்கு சதவீதமும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. இந்த நிலையில் தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. தேமுதிக சார்பில் பிரச்சாரம் மேற்கொள்ள நேற்று மாலை திருச்சி காந்தி மார்க்கெட் அருகே பிரேமலதா வருகை தருவதால் மேடை ஏற்பாடுகள் எல்லாம் ஜரூராக இருந்தன.

தலைவர்
பொதுவாக கட்சி தலைவரோ முக்கியஸ்தர்களோ தேர்தல் பிரச்சாரத்திற்கோ இல்லை பொதுக் கூட்டத்திற்கோ வந்தால் அவர்கள் வரும் வரை அக்கட்சியின் நிர்வாகியோ இல்லை பேச்சாளரோ தொண்டர்கள், மக்கள் முன்பு பேசிக் கொண்டிருப்பார். அப்போதுதான் தலைவர் வரும் போது அரங்கமே நிறைந்திருக்கும்.

அரை மணி நேரம் பேசிய நிர்வாகி
அது போல் பிரேமலதா வரும் வரை மேடையில் பேச எண்ணிய நிர்வாகி ஒருவர் மைக்கை பிடித்து பேசிக் கொண்டிருந்தார். அரைமணி நேரமாக தொண்டை தண்ணீர் வற்ற பேசிக் கொண்டிருந்த நிலையில் சுற்றி பார்த்தால் ஒரு தொண்டரோ மக்களோ யாரும் இல்லை. விவேக் காமெடி போல் யாருமே இல்லாத கடைக்கு யாருக்கு டீ ஆத்துற கதையா இருந்தது. ஒரு சில கட்சி கூட்டங்களில் நாற்காலிகள் காற்று வாங்குகின்றன என காமெடியாக சொல்வதுண்டு. ஆனால் இவரது பேச்சை கேட்க அந்த நாற்காலிகள் கூட இல்லாதது மிகவும் "பரிதாபத்துக்குரியதாக இருந்தது". இவர் பாட்டுக்கு பேசிக் கொண்டிருக்க, மக்கள் போக்குவரத்து இயங்க, போக்குவரத்து காவலர் போக்குவரத்தை சீர் செய்ய என பார்ப்பதற்கே காமெடியாக இருந்தது. இவரை பார்த்த மக்கள் கடமையுணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா என பேசிக் கொண்டனர்.

பிரேமலதா பிரச்சாரம்
அதன் பின்னர் நல்ல வேளையாக தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வந்து காந்தி சிலை முன்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில் கேப்டன் உடல்நலத்துடன் இருக்கிறார். தேமுதிக வேட்பாளர்கள் வெற்றி பெற வாழ்த்துகளை தெரிவித்தார். யார் வெற்றி பெற்றால் மக்களுக்கு நல்லது செய்வார்கள் என்பதை சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications