2 நாளா மின்சாரம் இல்லை.. இனியும் வருமான்னு தெரியாது.. கஜாவால் நிலைகுலைந்த திருச்சி!
கஜா புயல் காரணமாக மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி 2-வது நாளாக திருச்சியில் உள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி: கஜா புயல் காரணமாக மின்கம்பம் சாய்ந்ததால் மின்சாரம் இன்றி 2-வது நாளாக திருச்சியில் உள்ள மக்கள் தவித்து வருகிறார்கள். இதனால் அவர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் கஜா புயல் காரணமாக 200-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்மாற்றிகள் உடைந்து துண்டாகியும், சாய்ந்தும் சாலையிலும், வீட்டின் மீதும் விழுந்தன. இதனால் திருச்சி மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியான மணப்பாறை, மருங்காபுரி உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
[கஜா பாதிப்புகளை அரசு கண்டுகொள்ளவில்லை.. திருச்சியில் தெருவில் இறங்கி மக்கள் போராட்டம்! ]
மின்கம்பங்கள் சேதமடைந்த பகுதிகளில் மின்வாரிய ஊழியர்கள் பணி தொடங்கினாலும், சில இடங்களில் அதை சீரமைப்பதற்கு ஒருவாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. அத்துடன் உடைந்த மின்கம்பங்களுக்கு பதிலாக மாற்று மின்கம்பங்கள் நடப்பட்டு மின்சார வயர்கள் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
ஆனால், குறிப்பிட்ட இடங்களில் மின்கம்பங்களை மாற்றுவதற்கும், சீரமைப்பதற்கும் மின்வாரிய ஊழியர்களே வரவில்லை என்பது பொதுமக்கள் குற்றச்சாட்டாக உள்ளது. ஏனென்றால், திருச்சி மாவட்டத்தில் 'கஜா' புயல் தாக்கும் என முன்கூட்டியே வானிலை அறிவிப்பாளர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், திடீரென திசைமாறிய புயல் திருச்சியையும் விட்டு வைக்கவில்லை.
அதே வேளையில் மின்வாரிய ஊழியர்கள் பலர் நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களுக்கு புயல் வருவதற்கு முன்பே அங்கு நிவாரண பணிகளுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால், போதிய மின்வாரிய ஊழியர்கள் இல்லாததால், திருச்சி மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மின்கம்பங்களை சீரமைக்க இயலாமல் இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
திருச்சி மாநகரில் கிராப்பட்டி பகுதியில் அருணாசலம் நகர் 1-வது குறுக்குத்தெரு, 2-வது குறுக்குத்தெரு ஆகியவற்றில் 3 மின்கம்பங்கள் நேற்று முன்தினம் கஜா புயலின் கோர தாண்டவத்தால் சாய்ந்தும், உடைந்தும் வீட்டின் மீது விழுந்தன. மின்வயர்களும் அறுந்து விட்டன. இதனால், அப்பகுதியில் மின்சாரம் இல்லாமல் போனது. ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இன்றி அப்பகுதி மக்கள் அவதிப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாகவும் மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய ஊழியர்கள் யாரும் வரவில்லை. எனவே, 2-வது நாளாகவும் 2 தெரு மக்களும் கடும் அவதிப்பட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-கிராப்பட்டி அருணாசலம் நகர் பகுதியில் புயலால் சாய்ந்த மின்கம்பங்களை சீரமைத்து மின் வினியோகம் வழங்கும்படி 2 நாட்களாக அதிகாரிகளிடம் முறையிட்டு வருகிறோம். அவர்கள், நேரில் வந்து ஆய்வு செய்து விட்டு சீரமைத்து தருவதாக கூறினார்கள். ஆனால், அதன்பின்னர் வரவில்லை. இன்றும்(நேற்று) மின்வாரிய ஊழியர்களிடம் முறையிட்டோம்.
அதற்கு அவர்கள், உடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பங்கள் இல்லை என்று கூறினார்கள். எங்கள் பகுதியில் சில வீடுகளில் 'இன்வெர்ட்டர்' வசதி உள்ளது. அவை 4 மணி நேரத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்த முடிந்தது. மின்மோட்டார்களை இயக்க மின்சாரம் இல்லை என்பதால் குளிப்பதற்கும், கழிவறை செல்வதற்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம். இரவில் கொசுக்கடியால் தூங்க முடியவில்லை. எனவே, மின்கம்பம் இல்லை என்று சாக்குபோக்கு சொல்லாமல் உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லையேல் மக்களை திரட்டி போராட வேண்டிய சூழல் ஏற்படும்" என்றனர்.
இதேபோல் திருச்சி மாநகரில் திருவெறும்பூர் திருவேங்கடம் நகர் பகுதியில் பல வீடுகளுக்கு 2 நாட்களாக மின்சாரம் இல்லாததால் அப்பகுதி மக்கள் மிகுந்த அவதி அடைந்தனர்.பல இடங்களில் மின்கம்பம் மாற்றப்படாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.