ஆளுநர் "உண்மையை சொல்லாமல்" விட்டாரேனு சந்தோஷப்படுங்கள்.. எச்.ராஜா திகுதிகு வார்னிங்
திருச்சி : தமிழ்நாடு ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அவரை விமர்சிப்பதை கைவிட்டால் தி.மு.க.வினர் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம் என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருச்சி பாலக்கரை மண்டல பா.ஜ.க. சார்பில் வி.எம்.பேட்டையில் நம்ம ஊர் மோடி பொங்கல் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பா.ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு, பொங்கல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளித்தார்.
விழாவில் கலந்து கொண்ட எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் ஆளுநர் மற்றும் பா.ஜ.க.வை வேண்டுமென்றே தாக்குகிறார்கள்.
ஆளுநருக்கு "அட்வைஸ்" கொடுங்கள்.. ஸ்டாலினின் "மெகா" மூவ்.. இன்றே டெல்லிக்கு பறக்கும் ரவி.. ட்விஸ்ட்
மத்திய அரசு
தொடர்ந்து மறைமுகமாக மத்திய அரசையும் தாக்குகிறார்கள். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு பிம்பத்தை உருவாக்கினார்களோ அதே போன்று தற்போது உருவாக்க முயற்சிக்கிறார்கள். சட்டசபையில் உரையாற்றும்போது ஆளுநர் சில விஷயங்களை தவிர்த்து பேசியிருக்கிறார்.
உரிமை
அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. மற்றொரு முக்கிய காரணம் அதில் எழுதப்பட்டிருந்தது அனைத்தும் பொய்யானவை. அதனால் தான் அவற்றை அவர் தவிர்த்து இருக்கிறார். ஆளுநருக்கு அரசு அனுப்பிய உரையில் தமிழ்நாடு அமைதி பூங்காவாக திகழ்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் கஞ்சா அதிகமாக பிடிபடுகிறது. கோவையில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது.
பாஜக பிரமுகர்
ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இப்படி தினமும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். ஆளுநர் தனது உரையில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என்று சொல்லாமல், அவர்கள் கொடுத்த பொய்யான தகவலை தவிர்த்துள்ளார். அதற்கு சந்தோஷப்பட வேண்டும். மாறாக ஆளுநரை கைக்கூலிகளை வைத்து எதிர்ப்பது எந்த வகையில் நியாயம்?
அன்னிய முதலீடு
அதுபோல் தமிழகம் அன்னிய முதலீட்டை அதிகமாக ஈர்த்துள்ளதாக ஆளுநருக்கு அனுப்பிய உரையில் தெரிவித்துள்ளனர். ஆனால் உண்மை நிலவரம் வேறு. தமிழகத்தை விட கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஆண்டு பல மடங்கு அதிகமாக அன்னிய முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி ஆளுநரை படிக்கச் சொன்னால் அவர் எப்படி படிப்பார்.
ஆளுநரை கண்டிக்கும் திமுக
ஆனால் ஆளுநரை பலரும் கண்டித்து வருகின்றனர். தற்போது அவரை கண்டித்து விமர்சனம் செய்யக்கூடாது என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நிலைமையை புரிந்ததால் அவர் அவ்வாறு கூறியுள்ளார். ஆளுநரை தொடர்ந்து எதிர்த்தால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். அவரை விமர்சிப்பதை தி.மு.க.வினர் நிறுத்திக்கொண்டால் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு எச் ராஜா கூறினார். தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் அரசு தயாரித்த உரையை ஆளுநர் முழுமையாக படிக்கவில்லை என தமிழக அரசு குற்றம்சாட்டியுள்ளது. அந்த் உரையில் இருந்த சமத்துவம், சமூகநீதி, மதநல்லிணக்கம், பெண்ணுரிமை உள்ளிட்ட வார்த்தைகளையும் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோர் பெயர்கள் கொண்ட பத்தியையும் ஆளுநர் தவிர்த்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆளுநர் முன்னிலையில் அவரது உரைக்கு எதிராக தீர்மானத்தை முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்தார். இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.