திருச்சி மாவட்டத்தை புரட்டிப்போட்ட 3 மணி நேர மழை.. குளம் நிரம்பி ஊருக்குள் வந்த வெள்ளம்
திருச்சி: மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு இடைவிடாமல் 3 மணி நேரம் பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்தது. 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தவித்து போயினர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தொடங்கிய கனமழை பின்னர் பேய் மழையாக மாறி 3 மணி நேரத்திற்கு மேலாக கொட்டி தீர்த்து
இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளமாக மாறியது. மழை நீர் வடிகால் இன்றி தேங்கி நின்றதால் பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. . போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி அடைந்தனர்.
மணப்பாறையில் உள்ள கரிக்கான் குளம், அப்பு ஐயர் குளம், காடுமுனியப்பன் கோவில் ஊரணி, அத்திக்குளம் ஆகியவை நிரம்பி வழிந்தது. குளத்திற்கான போதிய வடிகால் வாய்க்கால் பாதைகளும் இல்லை. இதனால் குளத்திலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வர வேண்டிய நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த மணப்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, வட்டாட்சியர் லஜபதிராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் செந்தில் ஆகியோர், வெள்ள நீரில் சிக்கிய மக்கள் அருகில் உள்ள பள்ளிவாசல், மாரியம்ம கோயில் மண்டபம் ஆகியவற்றில் தங்கவைத்து அடிப்படை வசதிகளை அளித்தனர்.
நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய வடிகால் வாய்க்கால்களை அமைத்தால் தான் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று மணப்பாறை பகுதி மக்கள் தெரிவித்தனர்.