Vijay: விஜய்யை பார்க்க விபரீதம் செய்த தவெக தொண்டர்! துப்பாக்கி முனையில் பிடித்த சிஆர்பிஎஃப்
திருச்சி: நாமக்கல், கரூரில் நடக்கும் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள திருச்சி வந்த தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை பார்ப்பதற்காக போலி அடையாள அட்டையுடன் திருச்சி விமான நிலையத்திற்கு வந்த தவெக தொண்டரை துப்பாக்கி முனையில் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வரும் 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலையொட்டி தமிழக வெற்றிக் கழகம் (TVK) சார்பில் அதன் தலைவர் விஜய், கடந்த 13 ஆம் தேதி முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அன்றைய தினம் திருச்சி, அரியலூர், பெரம்பலூரில் கலந்து கொண்டார்.

அதற்கு அடுத்த வாரம் செப்டம்பர் 20ஆம் தேதி தஞ்சை, நாகை ஆகியவற்றில் கலந்து கொண்டுள்ளார். மேலும் 27ஆம் தேதியான இன்று விஜய், நாமக்கல், கரூர் பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார்.
தனி விமானம்
இதற்காக விஜய் இன்று காலை நீலாங்கரை வீட்டிலிருந்து சென்னை விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.
விமான நிலையம்
இந்த நிலையில் விமான நிலையத்திற்குள் ஒருவர் விமான ஊழியர் போல் வந்தார். அவரை பார்த்து பாதுகாப்பு படையினர் சந்தேகமடைந்தனர். அவரது கழுத்தில் விமான ஊழியர் என்பதற்காக டேக் இருந்தது. எனினும் அவர் மீது பாதுகாப்பு படையினர் சந்தேகமடைந்தனர்.
துப்பாக்கி முனை
உடனே அவரை துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போதுதான் அவர் கழுத்தில் அடையாள அட்டை இல்லாமல் வெறும் டேக் மட்டும் இருந்தது தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், தான் தவெக தொண்டர் என்றும் விஜய்யை பார்ப்பதற்காக இப்படி வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை பாதுகாப்பு படையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விஜய்யை பார்க்க
விஜய்யை பார்க்க அவரது வாகனம் பின்னால் தொண்டர்கள் யாரும் வரவேண்டாம் என கட்சித் தலைமை அறிவுறுத்தினாலும் யாரும் கேட்பதாக இல்லை. இவர்கள் அணி அணியாக படையெடுத்து வருவதால் உள்ளூர் மக்களுக்கும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன் விஜய்யும் உரிய நேரத்தில் பிரச்சார இடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதை எப்போதுதான் உணர போகிறார்களோ!
நாமக்கல் தொண்டர்கள்
அது போல் இன்று நாமக்கல்லில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்தை சுற்றி இருந்த தவெக தொண்டர்கள் அந்த வழியாக வாகனத்தில் செல்லும் மக்களிடம் "தவெகவுக்கு ஓட்டு போடுங்க மேடம், தவெகவுக்கு ஓட்டு போடுங்க சார்" என பிரச்சாரத்தை செய்தனர். அது போல் சில ரசிகர்கள் பிரச்சார வாகனங்களில் ஏற முயற்சிப்பது, விஜய்யை பார்க்க ஆபத்து என அறியாமல் உயர்ந்த கட்டடங்களிலும் மரக்கிளைகளிலும் ஏறி நிற்பது போன்ற செயல்களில் செய்து வருகிறார்கள்.
நீலாங்கரை வீடு
அந்த வகையில் கடந்த வாரம் விஜய்யின் நீலாங்கரை வீட்டில் ஒரு நபர் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜய் வீட்டின் மொட்டை மாடியில் யாரோ அமர்ந்திருப்பதை பாதுகாப்பு பணியாளர்கள் பார்த்தனர். உடனே அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் பெயர் அருண் என தெரியவந்தது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் விஜய்யை பார்க்க வந்ததும் தெரியவந்தது. இப்படியாக ரசிகர்கள் எத்தனையோ ரிஸ்க் எடுத்து தவெக தலைவர் விஜய்யை பார்க்க முயற்சிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications