எல்லாத்துக்குமே காரணம் இந்த திமுகதான்.. "ஓபிஎஸ் கூட சேர்ந்துட்டு.." ஆவேசமான வளர்மதி
திருச்சி: அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்று நோக்கில் செயல்பட்டு வரும் ஓபிஎஸ், விரைவில் பாஜகவில் சேர்ந்துவிடுவார் என்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் வலுத்துவரும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்துள்ளனர். இதனிடையே நேற்று சென்னையில் நடைபெற்ற அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வத்தை பொருளாளர் பதவியில் இருந்து நீக்க ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, ஓபிஎஸ் அதிமுகவின் துரோகி என்று ஜெயக்குமார் குற்றம்சாட்டினார்.
இதன்மூலம் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் உட்கட்சி பூசல் அப்பட்டமாய் வெளியில் தெரிந்தது. தொடர்ந்து சென்னை வந்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாராவது மேல்முறையீடு செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திருச்சியில் இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் வளர்மதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் பலரும் ஆட்சியை பிடிக்கலாம் என்று நினைத்தார்கள். ஆனால் எடப்பாடி பழனிசாமி, 4 ஆண்டுகள் சிறப்பாக கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்தினார். ஆனால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம், திமுகவினரை தொடர்ந்து பாராட்டினார். திமுக அமைச்சர்கள், திமுக தலைவர்களை ஓபிஎஸ் பாராட்டியது, தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல், ஓபிஎஸ் மகன், ஓ.ரவீந்திரநாத், தொகுதி பிரச்னை காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.
ஆனால், இபிஎஸ் முதலமைச்சராக இருக்கும் போது, ஓபிஎஸ் மகன், ஒருமுறை கூட சந்தித்ததில்லை. இதனால் ஓபிஎஸ் குடும்பத்தினர் திமுகவோட உறவு வைத்திருக்கிறார்கள் என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து செயல்பட்டபபோது கட்சியின் சின்னத்தை முடக்கியவர். அதிமுகவை பிளவுபடுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் செயல்பட்டு வருகிறார். அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரும் இபிஎஸ்-க்கு ஆதரவாக இருக்கிறோம்.
ஓ.பன்னீர் செல்வம் விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார். அதனால் அதிமுகவுக்கு எவ்வித பின்னடைவும் ஏற்படாது. அதேபோல் சசிகலா மற்றும் ஓபிஎஸ் சுற்றுப்பயணத்தால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. திருச்சி மாவட்டச் செயலாளராக உள்ள வெல்லமண்டி நடராஜன், ஓபிஎஸ் ஆதரவளிப்பது அவரின் தனிப்பட்ட விருப்பம் என்று தெரிவித்தார்.