அதிகாலையில் பயங்கரம்.. நாகர்கோவில் டூ சென்னை வந்த ஆம்னி பஸ் தலைகுப்புற கவிழ்ந்தது.. அலறிய பயணிகள்
திருச்சி: நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் திருச்சி அருகே இன்று அதிகாலையில், தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்து உளுந்தூர்பேட்டை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாகர்கோவில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்பட தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு தினமும் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகள் இயங்கி வருகின்றன. சொகுசு, சரியான நேரத்திற்கு வந்துவிடும் என்பதால், பயணிகள் பலரும் இத்தகைய ஆம்னி பேருந்துகளை நாடி செல்கிறார்கள். இந்த நிலையில், நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நாகர்கோவிலில் இருந்து நேற்று இரவு சென்னைக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு வந்தது. இந்த பஸ்சை ஹரிகரன் என்பர் ஓட்டியதாக கூறப்படுகிறது. பஸ் இன்று அதிகாலையில் திருச்சியை தாண்டி வந்துகொண்டிருந்தது. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் என்று இடத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலை தடுப்புச்சுவரில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
உளுந்தூர்பேட்டை ஆசனூர் பகுதியில் அங்கு புறவழிச்சாலையில் சாலை மேம்பாலம் அமைக்கும்பணி நடந்து வருகிறது. ஆம்னி பஸ் டிரைவர் ஹரிகரன் இதனை கவனிக்காமல் வேகமாக வந்ததால் இந்த விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது. பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பஸ் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர்.

பஸ் டிரைவர் ஹரிகரன் உள்பட 15 பயணிகள் படுகாயமடைந்தனர். மேலும் சிலர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர். விபத்து நேரிட்டதும் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன. இதற்கிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் இடைக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்கள் உடனடியாக பஸ் விபத்தில் காயமடைந்த 15 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதன் பின்னர் போலீசார் கிரேனை வரவழைத்து ஆம்னி பஸ்சை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போக்குவரத்து சீர் செய்தனர். ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது குறித்து இடைக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications