சமயபுரம் மாரியம்மனின் தங்கத்தை திருடி பாக்கெட்டில் போட்ட செயல் அலுவலர்.. காட்டிக்கொடுத்த சிசிடிவி
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் உண்டியலில் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை திருடி பாக்கெட்டில் போட்ட செயல் அலுவலரை சிசிடிவி காட்சிகள் காட்டிகொடுத்தது. தங்கத்தை திருடி விட்டு தலைமறைவான செயல்அலுவலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் பிரசித்திப் பெற்ற சக்தி ஸ்தலமாகும். நினைத்தாலே போதும் வேண்டிய வரங்கள் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அம்மனை வேண்டிக்கொண்டால் நோய் நொடிகள் நீங்கும் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சென்று தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். மாதந்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டு கணக்கு வைக்கப்படுகிறது. அந்த உண்டியல் காணிக்கையாக வந்த தங்கத்தை திருடியுள்ளார் செயல் அலுவலர் ஒருவர். அவர் திருடியது சிசிடிவி காட்சியில் பதிவானதால் கையும் களவுமாக மாட்டிக்கொண்டார்.

உண்டியல் பணம்
கடந்த நவம்பர் மாதம் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை கோயிலின் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் உதவி ஆணையர்கள் முன்னிலையில் தன்னார்வலர்கள் , கோயில் பணியாளர்கள் உள்ளிட்டோர் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையாக ரூ .83 லட்சத்து 79 ஆயிரத்து 394 ரொக்கமும் , 2 கிலோ 667 கிராம் தங்க மும் , 3 கிலோ 121 கிராம் வெள்ளியும் , வெளிநாட்டு பணம் 104 ம் கிடைத்தது.

தங்கம் திருட்டு
இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி காணிக்கை என்னும் பணியினை சிசிடிவி காட்சியில் பார்த்த கொண்டிருந்த போது அதிர்ச்சி அடைந்தார். அந்த சிசிடிவி காட்சியில் திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வெற்றி வேல் என்பவர் யாரும் பார்க்காத நேரத்தில் சுமார் 30 கிராம் எடையுள்ள தங்க நாணயங்களை திருடி அவரது பேன்ட் பாக்கொட்டில் மறைத்து வைக்கும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.

போலீசில் புகார்
இதுகுறித்து சமயபுரம் கோயில் இணை ஆணையர் கல்யாணியிடம் கண்காணிப்பாளர் அழகர்சாமி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து 1.50 லட்சம் மதிப்புள்ள 30 கிராம் தங்க நாணயங்களை திருடிய செயல் அலுவலர் வெற்றி வேலிடமிருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இந்த திருட்டு குறித்து சமயபுரம் காவல் நிலையத்திலும், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் உள்ளிட்டோருக்கு கோயில் இணை ஆணையர் கல்யாணி புகார் அளித்தார்.

செயல் அலுவலர் தலைமறைவு
இதுகுறித்து அறிந்த செயல் அலுவலர் வெற்றிவேல் தற்போது தலைமறைவாகியுள்ளார். சமயபுரம் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கையை கோவில் செயல் அலுவலரே திருடிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. செயல் அலுவலரை உடனே கைது செய்யாமல் தப்பவிட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications