டிசம்பரில் மாநில கல்வி கொள்கை வரைவு அறிக்கை! "அப்புறம் பாருங்க.." பாஜகவிற்கு அன்பில் மகேஷ் பதிலடி
திருச்சி: மாநில கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கையை அறிவித்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. அதுமட்டுமல்லாமல் மாநிலத்துக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவதாகவும் தமிழக அரசு அறிவித்தது.
இதற்காக ஓய்வுபெற்ற டெல்லி உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் உயர்மட்டக் குழுவை அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகாத நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் மாநில கல்விக் கொள்கை அமைக்கும் குழுவின் வரைவு அறிக்கை வரும் டிசம்பர் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சூப்பர்! அரசு பள்ளி மாணவர்கள் 68 பேருடன் துபாய் கல்வி சுற்றுலா செல்லும் அமைச்சர் அன்பில் மகேஷ்!
துபாய் செல்லும் மாணவர்கள்
கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வாரந்தோறும் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. மாவட்ட அளவில் சிறப்பாக பங்காற்றிய மாணவர்கள் அனைவரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துபாய் அழைத்து செல்ல பள்ளி கல்வி துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அப்போது ஒமிக்ரான் பரவல் காரணமாக அந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
மாணவர்களோடு அன்பில் மகேஷ்
இந்நிலையில் அப்போது தேர்தெடுக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் 11 ஆம் வகுப்பு சென்று விட்ட நிலையில் அவர்கள் அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அப்போது ஒத்திவைக்கப்பட்ட பயணத்தை இன்று மேற்கொள்கின்றனர். மாணவர்களோடு அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் செல்கிறார். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நாங்கள் அவர்களை வெளிநாடுகளுக்கு அழைத்து செல்கிறோம்.
தாய், தந்தையாக இருப்பேன்
சார்ஜாவில் நடைபெறும் சர்வதேச புத்தக கண்காட்சி, துபாய், அபுதாபியில் முக்கிய இடங்களை அவர்களுக்கு சுற்றி காட்ட உள்ளோம். நான்கு நாட்களும் அவர்களுக்கு தாயாகவும், தந்தையாகவும் நான் இருப்பேன். தற்போது மாணவர்களை சி.எஸ்.ஆர் நிதியிலிருந்து அழைத்து செல்கிறோம். வரும் காலங்களில் மாணவர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் வாசிக்கலாம் வாங்க உள்ளிட்ட திட்டங்கள் மூலம் தமிழ்நாடு அரசு சார்பிலேயே வெளிநாடுகளுக்கு அழைத்து செல்வோம் என்று தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கை
தொடர்ந்து புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு பின்பற்றுவதாக மத்திய இணையமைச்சர் பேச்சு பற்றிய கேள்விக்கு, புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு பின்பற்றுவதாக அண்ணாமலை மட்டுமல்ல, ஒன்றிய கல்வி அமைச்சரே கூறி வருகிறார். ஆனால் புதிய கல்வி கொள்கையை ஆரம்ப நிலையிலிருந்தே முதலமைச்சர் எதிர்த்து வருகிறார்.
டிசம்பரில் வரைவு அறிக்கை
அதற்காக தான் மாநில கல்வி கொள்கை வகுக்க குழு அமைத்துள்ளார். அதை அவர்கள் தெரிந்து கொண்டு பேச வேண்டும். மாநில கல்வி கொள்கை தயாரிப்பு குழுவின் வரைவு அறிக்கை டிசம்பர் முதல் வாரத்தில் தாக்கல் செய்த பின்பு நாங்கள் எதை பின்பற்றுகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும் என்று தெரிவித்தார்.
உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீடு
தொடர்ந்து உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு பற்றி கேள்விக்கு, பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான இட ஒதுக்கீடு காரணமாக பள்ளி கல்வித்துறை மட்டுமல்லாது, பல துறையிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படும். எனவே இதை தடுப்பதற்காக தமிழக முதல்வர் தனியாக ஒரு குழு அமைத்துள்ளார். உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டில் இருந்து நம்மை காக்கின்ற முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருப்பார் என்று தெரிவித்தார்.