"சொதப்பிய மைக், ஸ்பீக்கர்".. விஜய் பேச்சு கேட்காததால் 7மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் விரக்தி
திருச்சி: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திருச்சியில் இன்று தனது முதல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். திருச்சி மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டர்களும், ரசிகர்களும் விஜயைக் காண்பதற்காக குவிந்துள்ளதால் திருச்சி நகரமே ஸ்தம்பித்துள்ளது. விஜயின் பேச்சை கேட்பதாற்காக சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக தொண்டர்கள் காத்திருந்த நிலையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விஜயின் பேச்சு சரியாக கேட்காததால் தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் தனது முதல் பிரச்சார பயணத்தை திருச்சியில் தொடங்கினார். தவெக பிரச்சாரத்துக்கு காவல் துறை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருச்சி மரக்கடை பகுதியில் எம்ஜிஆர் சிலை அருகே பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது. விஜய் தனி விமானம் மூலமாக திருச்சி விமான நிலையத்திற்கு வந்திருந்தார். அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

விமான நிலைய வளாகத்துக்குள் காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளை எல்லாம் உடைத்துவிட்டு ரசிகர்கள் விஜயை பார்ப்பதற்காகச் சென்றனர். இதனால், காவல் துறையினருக்கும், தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விஜயின் பேச்சை கேட்பதற்காகவும், அவரைக் காண்பதற்காகவும் பல்லாயிரக்கணக்கானோர் திருச்சியில் குவிந்ததால் திருச்சி மாநகரமே ஸ்தம்பித்தது.
திருச்சி விமான நிலையம் முதல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள மரக்கடை எம்ஜிஆர் சிலை வரை தொண்டர்கள் பலரும் திரண்டிருந்தனர். வீடுகள், சுவர்கள், கட்டடங்கள், மரங்கள் உள்ளிட்டவற்றின் மேல் விஜய் கட்சியினர் ஏறி நின்று விஜய்க்காக காத்திருந்தனர். காலையில் நடக்க வேண்டிய பிரச்சாரம் கட்டுக்கடங்காத கூட்டம் காரணமாக தொடர்ந்து தாமதமாகியது.
10:30 மணிக்கு விஜயின் பிரச்சாரத்தை தொடங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், தொண்டர்கள் சூழ்ந்ததால் திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியில் வருவதற்கே ஒரு மணி நேரத்திற்கு மேலானது. பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், பெரியவர்கள் பிரச்சாரத்துக்கு வர வேண்டாம் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், குழந்தைகளுடன் சிறுவர்களுடன் பெண்கள், பெரியவர்கள் என பலரும் விஜயின் பேச்சைக் கேட்பதற்காகவும், அவரைப் பார்ப்பதற்காகவும் காத்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து, மரக்கடை பகுதியை அடைந்த விஜய் தொண்டர்கள் மத்தியில் பேசத் தொடங்கினர். அண்ணா போல தனது பயணத்தை திருச்சியில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குவதாகக் கூறி அவர் பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே மைக்கில் கோளாறு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, இரண்டாவது மைக்கில் அவர் தனது உரையைத் தொடங்கினார். ஆனால், தொழில்நுட்பக் காரணமாக விஜயின் ஆடியோவில் பிரச்சனை காணப்பட்டது. இதனால், தொலைக்காட்சி ஒளிபரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டது.
விஜய் பேசுகையில், "அந்த காலத்தில் போருக்கு போறதுக்கு முன்னாடி ஜெயிக்கிறதுக்கு குலதெய்வதம் கோயிலில் சுவாமி கும்பிட்டுத்தான் செல்வார்களாம். அது போல் அடுத்த வருடம் தேர்தலில் வெற்றி பெற திருச்சியில் மக்களை கும்பிட வந்திருக்கிறோம்.
திருச்சியில் தொடங்கிய எல்லாமே திருப்புமுனையாக அமையும் என்பார்கள். இதற்கு நிறைய உதாரணங்கள் உள்ளன. அண்ணா துரை தேர்தலில் போட்டியிட முடிவு செய்த இடம் திருச்சியில்தான். இது 1956 இல் நடந்தது. அது போல் எம்ஜிஆர் மாநில மாநாட்டை 1975 இல் திருச்சியில்தான் நடத்தினார்.
திருச்சியில் மலைக்கோட்டை, பெரியாருடைய இடம் உள்ளது. பெரியாரும் அண்ணாவும் நேசித்த இடம் திருச்சி. நம்ம மக்களாகிய உங்கள் எல்லாரையும் பார்த்துட்டு போக வந்திருக்கிறேன். ஒரு சில மண்ணை தொட்டால் நல்லது என பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அது போல் திருச்சியில் தொடங்கிய எல்லாமே வெற்றிதான் என்று கூறினார். தொடர்ந்து திமுகவுக்கு எதிராக பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மைக், ஸ்பீக்கர், தொலைக்காட்சி ஒளிபரப்பில் சிக்கல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, விஜய் தனது உரையை சுருக்கமாக முடித்துக் கொண்டார். மைக் மற்றும் ஸ்பீக்கரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விஜயின் பேச்சைக் கேட்பதற்காக சுமார் 7 மணி நேரமாக காத்திருந்த தொண்டர்கள் விரக்தி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications