யார் சொன்னது? அதிகாரம் உள்ளவர் அல்ல! ஆளுநருக்கு கட்டுப்பட்டவரா முதல்வர்? திருமாவளவனின் பரபர பதில்
திருச்சி : ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல எனவும், முதலமைச்சர் மக்களுக்குத்தான் கட்டுப்பட்டவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
Recommended Video
நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அதனை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்திய நிலையில் , மீண்டும் சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

தொல்.திருமாவளவன்
இதனால் ஆளுநர் அளித்த தேநீர் விருந்தை தமிழகத்தில் பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளை தவிர பெரும்பாலான கட்சிகள் புறக்கணித்தன. இந்நிலையில் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கூறி வருகின்றனர். இதற்கிடையே ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல எனவும், முதலமைச்சர் மக்களுக்குத்தான் கட்டுப்பட்டவர் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

நீட் விலக்கு மசோதா
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் திருமாவளவன் செய்தியாளர்களிடையே பேசும் போது, " தொடர்ந்து தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பவில்லை என்பதால் தான் அவர் தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தது. அதிகாரப்பூர்வமாக இன்னும் அவர் மசோதாவை அனுப்பியதாக தெரியவில்லை.

அனுப்பினால் மகிழ்ச்சி
இந்நிலையில் அவர் குடியரசு தலைவருக்கு அனுப்பி விட்டார் என்பது போன்ற செய்திகளை சிலர் பரப்புகிறார்கள். அது உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி. திமுகவின் அமைச்சர்கள் ஆளுநரை சந்தித்து இது குறித்து பேசியபோது எப்போது அனுப்புவேன் என்று சொல்ல இயலாது என கூறியதாக தகவல் தெரிகிறது. இதுவரை சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 11 மசோதா ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அது இன்னும் அனுப்பவில்லை என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.

ஆளுநருக்கு கட்டுப்பட்டவரா?
ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் உள்ளவர் அல்ல. சட்ட மசோதாவை பொறுத்தவரையில் குடியரசு தலைவருக்கு அனுப்ப கடமைப்பட்டவர். அவர் உடனே மசோதாக்களை அனுப்ப வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறோம். முதல்வர் ஆளுநருக்கு கட்டுப்பட்டவர் என்று தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், "முதலமைச்சர் மக்களுக்குத்தான் கட்டுப்பட்டவர். ஆளுனர் ஒன்றிய அரசின் பிரதிநிதி அதனால் தான் திமுக ஆட்சி வந்தது முதல் ஆளுநர் பதவி தேவையில்லை என பேசி வந்திருக்கிறது. இப்போதும் அவர்கள் பேச வேண்டிய நிலை ஏற்படுத்துகின்றனர்." என பேசினார்.












Click it and Unblock the Notifications