இந்தாங்க உங்க 1000 ரூபாய் காசு.. வாரிக் கொடுத்த எம்எல்ஏவை திணறடித்த மாணவி! என்னதான் பிரச்சினை..!
தூத்துக்குடி : காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமர்தராஜ் உருவப்படத்தை வரைந்து கொடுத்த கல்லூரி மாணவிக்கு அவர் 1000 ரூபாய் கொடுத்த நிலையில், பணத்தை வாங்க மறுத்த மாணவி மேடையிலேயே அழுது புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.எஸ்.கே ராஜரத்தினம் அறக்கட்டளை சார்பில் "நமக்கு நாமே" திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பில் கல்லூரி கட்டடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கோடையை இதமாக்க வரும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு கனமழை காத்திருக்கு.. எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா
இதற்கு ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகருமான ஊர்வசி அமிர்தராஜ், உள்ளிட்ட பல கலந்து கொண்டர்.
கல்லூரி நிகழ்ச்சி
நிகழ்ச்சியில் எம்எல்ஏ பேசுவதற்கு முன்னதாக கல்லூரியில் மாணவி மாரியம்மாள் என்பவர் ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ் மற்றும் அந்த கல்லூரியின் கல்விக் கழக தலைவர் பெ.மு.சுப்ரமணியம் ஆகியோரின் படத்தை பென்சிலால் வரைந்து பரிசாக வழங்கினார். அதைப் பெற்றுக் கொண்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜ், மாணவி மாரியம்மாளுக்கு பரிசாக ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்தார்.
1000 ரூபாய் பரிசு
இதனைக் கண்ட அவர், "ஐயோ, எனக்கு இந்த பணம் வேண்டவே வேண்டாம்" என்று பிடிவாதமாகக் கூறினார். நான் பாசத்துடன் வரைந்து கொடுத்த இந்த ஓவியத்திற்கு எம்எல்ஏ பணம் கொடுக்கிறாரே என ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டு அழுதார். உடனே எம்.எல்.ஏவின் ஆதரவாளர்கள், கல்லூரி பேராசிரியர்கள் மாணவி அருகே வந்து பணத்தை வாங்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தினர்.
மாணவி பிடிவாதம்
ஆனாலும் கல்லூரி மாணவி வேண்டாம் என்று கண்ணீருடன் பிடிவாதமாகக் கூறிவிட்டார். காங்கிரஸ் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்தராஜை பொறுத்தவரை யார் உதவி கேட்டாலும் தவறாமல் வாரிக் கொடுப்பார் என்ற பேச்சு உண்டு. இந்த சூழலில் அவர் கொடுத்த அன்பளிப்பை கல்லூரி மாணவி வாங்காமல் தவிர்த்தது பேசுபொருளாக மாறியது.
விழாவில் பரபரப்பு
இதையடுத்து மாணவிக்கு கொடுக்க வந்த பணத்தை, கல்லூரி முதல்வர் சின்னதாயிடம் கொடுத்தார்.பின்னர் மாணவியை சமாதானப்படுத்தும் வகையில் சால்வை அணிவித்து கவுரப்படுத்தினார். இதையடுத்து அந்த மாணவிக்கு குடிக்க தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தனர் பேராசிரியர்கள். இதன் தொடர்ச்சியாக கல்விக் கழக தலைவர் பெ.மு.சுப்ரமணியத்திற்கு தான் வரைந்த ஓவியத்தை மாணவி பரிசாக கொடுத்தார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.