ஆஹா.. புரட்டிப்போடும் புயல்.. தூத்துக்குடியில் 30 அடி உள்வாங்கிய கடல்.. அதிர்ச்சியடைந்த மக்கள்
தூத்துக்குடி: மாண்டஸ் புயல் காரணமாக கடல் சீற்றமாக காணப்படும் நிலையில், தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே சென்னைக்கு 260 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் - மாமல்லபுரம் அருகே இன்று நள்ளிரவு கரையை கடக்கிறது.
மணிக்கு 12 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று இரவு 11.30 மணி முதல் நள்ளிரவு 2.30 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அலறவிடும் மாண்டஸ் புயல்.. சென்னையில் பொது போக்குவரத்து நிலை என்ன? பஸ், மெட்ரோ, ரயில்கள் இயங்குமா
பல்வேறு பகுதிகளில் கனமழை
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்று வைத்துள்ளனர். மாண்டஸ் புயலால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தமிழகம் மட்டும் இன்றி ஆந்திர மாநிலம் திருப்பதியிலும் கனமழை வெளுத்து வாங்குகிறது. கனமழை கொட்டி வருவதால் திருப்பதி சென்ற பக்தர்களும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தின் வடகடலோர மாவட்டங்களில் நல்ல மழைபெய்து வருகிறது. கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. சென்னை பட்டினப்பாக்கம், மாமல்லபுரம், திருவள்ளூர் பழவேற்காடு அருகே புயல் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மீனவர்கள் கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே தூத்துக்குடியில் கடல் உள்வாங்கியதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.
கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்
இதனால், படகுகள் அனைத்தும் துறைமுகத்திலும் கடற்கரை பகுதிகளிலும் நிறுத்தி வைக்கபட்டுள்ளன. வரிசையாக கடலோரங்களில் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இன்று காலை முதலே கடல் சீற்றமாக காணப்பட்டது. அலைகள் சுமார் 3 அடி உயரத்திற்கு சீறி எழுந்தன. மக்கள் கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்ததால் ஆள் நடமாட்டம் இன்றி கடற்கரையோரங்கள் காட்சி அளித்தன.
கடல் நீர் திடீரென உள்வாங்கியது
தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள ரோச் பூங்காவில் பகுதியில் கடல் நீர் உள்வாங்கியது. 30 அடி நீளத்திற்கு கடல் நீர் உள்வாங்கி காணப்பட்டது. இதனால், கடல் பாறைகள் மணல்கள் வெளியே தெரிந்தன. கடல் நீர் திடீரென உள்வாங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும், இதுபோன்று கடல் உள்வாங்குவது சாதாரணமான ஒன்றுதான் என்று அப்பகுதி மக்கள் சொல்வதையும் கேட்க முடிந்தது.