ராஜராஜ சோழன் போலவே முதல்வர் ஸ்டாலின்.. ஒப்பிட்ட திண்டுக்கல் ஐ.லியோனி.. ஆ.ராசா அப்படி பேசினாரே!
தூத்துக்குடி : ராஜராஜ சோழன் கோவில்கள் கட்டியது போல முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழக கோவில்களை புனரமைத்து அனைவரும் வழிபட ஏற்பாடு செய்து வருகிறார் என திண்டுக்கல் ஐ.லியோனி பேசியுள்ளார்.
தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, தூத்துக்குடியில் நடைபெற்ற திராவிட மாடல் ஆட்சி சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, ராஜராஜன் குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளதை விமர்சித்த ஐ.லியோனி, ராஜராஜ சோழன் போன்று தான் முதலமைச்சர் ஸ்டாலின் எனப் பேசியுள்ளார்.
திமுக எம்.பி ஆ.ராசா, ராஜராஜ சோழனை விமர்சித்துப் பேசியிருந்த நிலையில், திண்டுக்கல் ஐ.லியோனி, முதல்வர் ஸ்டாலினை ராஜராஜனோடு ஒப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ராஜராஜ சோழன் காலத்தில் இந்து மதம் இல்லையென்றால், தமிழ்நாடும்தான் இல்லை..பாஜக தேசிய நிர்வாகி காட்டம்
ராஜராஜ சோழன் சர்ச்சை
விசிக தலைவரும், எம்.பியுமான திருமாவளவனின் 60வது பிறந்தநாளையொட்டி நடத்தப்பட்ட விழா ஒன்றில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்துகொண்டார். அதில் பேசிய வெற்றிமாறன், "சினிமா என்னும் கலையை சரியாக நாம் கையாள வேண்டும். அப்படி கையாள தவறும்போது நம்முடைய அடையாளம் நம்மிடம் இருந்து பறிக்கப்படுகிறது. வள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக குறிப்பிடுவது என தொடர்ந்து நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்து சர்ச்சை
ராஜராஜ சோழன் இந்து இல்லை என வெற்றிமாறன் கூறியது பெரும் விவாதத்தையும் கிளப்பியது. ராஜராஜ சோழன் இந்து இல்லாமலா சிவன் கோயிலை கட்டினார் என பாஜக, இந்து முன்னணியினர் கேள்வி எழுப்பினர். அதேசமயம், ராஜராஜ சோழன் காலத்தில் இந்து என்ற மதம் இல்லை சைவம், வைணவம் என்றுதான் இருந்தது, பிற்காலத்தில் ஆங்கிலேயர்கள் வந்தபிறகே இந்து என்ற குடைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டது என சீமான், கமல்ஹாசன் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்தனர்.
திமுக சாதனை விளக்க கூட்டம்
இந்நிலையில், தூத்துக்குடியில் திமுக திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக பாடநூல் கழகத் தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்துகொண்டு பேசினார்.
ராஜராஜன் - ஸ்டாலின்
அப்போது பேசிய ஐ.லியோனி, "தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக ராஜராஜ சோழன் இந்துவா என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது தேவையா? ராஜ ராஜ சோழன் ஆலயங்களை கட்டி, ஆன்மீகத்தைப் பரப்பினார். சோழ மன்னன் எப்படி கோவில்கள் கட்டி அனைவரும் வந்து வழிபட ஆன்மீக தலங்கள் அமைத்தாரோ அதேபோல் தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
எடுத்துக்காட்டு
தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் புனரமைத்து அனைவரும் வழிபாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். அதற்கு எடுத்துக்காட்டாகத் தான் திருச்செந்தூர் முருகன் கோவில் 400 கோடி செலவீட்டில் புனரமைக்கும் பணிகள் நடக்கின்றன.
எல்லோருக்கும் எல்லாம்
இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என யாராக இருந்தாலும் தமிழர்கள் எனும் ஒற்றைக் குடைக்குக் கீழ் கொண்டு வந்தது திமுக. மூன்று மதங்களின் பாடல்களையும் பாடி, மதத்தால் நம்மை பிரிக்க நினைக்கும் பாஜகவின் முகத்திரையை கிழிக்கும் இயக்கம் திமுக. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி. ஒரு சாராருக்கு மட்டும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது சனாதன ஆட்சி" என திண்டுக்கல் லியோனி பேசினார்.
கட் செய்து எடிட் செய்து
மேலும், "தமிழ்நாட்டில் பெரியார், அம்பேத்கர் சிலைகளை அவமதித்து வருகின்றனர். புதுச்சேரியில் எம்.ஜி.ஆர், பெரியார் சிலைகளுக்கு செருப்பு மாலை அணிவித்தது தொடர்பான வழக்கில், சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என எஃப்.ஐ.ஆரில் தெரிவித்துள்ளனர். பாஜகவினர் கிறுக்கர்கள் என்று நான் சொல்லவில்லை, காவல்துறையினர் கூறியுள்ளனர். இதை நான் சொன்னால், இதை மட்டும் கட் பண்ணி எடிட் செய்து பாஜகவினரை கிறுக்கர்கள் என்று சொன்னார் லியோனி என்று போட்டுவிடுவார்கள்." எனப் பேசினார்.
ராஜராஜன் பற்றி ஆ.ராசா
ராஜ ராஜ சோழன் இந்துவா என்ற சர்ச்சைக்கு இடையே, உ.வே.சா எழுதிய நூலை மேற்கோள் காட்டி திமுக எம்.பி ஆ.ராசா சமீபத்தில் பேசியிருந்தார். "ராஜராஜ சோழனாகட்டும்.. ராஜேந்திர சோழனாகட்டும்.. எத்தனை லட்சம் நிலங்களை சதுர்வேதிமங்கலங்களாக மாற்றி இருக்கின்றனர். சதுர்வேதி மங்கலம் என்பது எது? பிராமணர்கள் சொன்ன பரிகாரப்படி, முக்குலத்தோர், தேவர், பள்ளர், பறையர்களிடம் இருந்து நிலத்தை பிடுங்கி நான்கு வேதங்களைக் கற்ற பிராமணர்களுக்கு சதுர்வேதி மங்கலம் அமைத்து கொடுத்தனர். அப்படி ராஜராஜ சோழன் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் கொடுத்தான். அது எல்லாம் எங்கள் சொத்து." எனப் பேசியிருந்தார். திமுக எம்.பி ஆ.ராசா ராஜராஜனை விமர்சித்துப் பேசியிருந்த நிலையில், திண்டுக்கல் ஐ.லியோனி, முதல்வர் ஸ்டாலினை ராஜராஜனோடு ஒப்பிட்டு பேசியிருக்கிறார்.