மத்திய அமைப்புகளுடன் இணைந்து போதைப்பொருளை ஒழிக்க வேண்டும் - வானதி சீனிவாசன் வலியுறுத்தல்!
தூத்துக்குடி: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க, மத்திய அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருள் பயன்பாட்டை ஒழித்துக்கட்டும் வகையில் 'ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.
இதேபோல், வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை கடத்தி வருபவர்களை போலீசார் குறிவைத்து கைது செய்து வருகின்றனர். எனினும் ஆங்காங்கே கஞ்சா கடத்தப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் தமிழக அரசு மீது பல்வேறு எதிர்க்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
அந்த வகையில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களை ஒழிக்க, மத்திய அமைப்புகளுடன் இணைந்து தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வானதி சீனிவாசன் கூறியவதாவது: தமிழகத்தினுடைய அரசியல் சூழ்நிலை வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காதவர்களும் ஏன் இந்த அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை என்கின்ற விதத்தில் ஆட்சி நடத்துவோம் என தமிழகத்தினுடைய முதல்வர் அறிவித்தார்.
ஆனால் தற்போதைய சூழல் வாக்களித்தவர்கள் கூட ஏன் இந்த கட்சிக்கு வாக்களித்தோம் என்று எண்ணுகின்ற சூழலில் தான் தமிழகத்தினுடைய அரசியல் சூழல் இருக்கிறது. மேலும். போதை பொருட்கள் நடமாட்டம் கஞ்சா என்பது எல்லா மாவட்டங்களிலும் கல்லூரி பள்ளி மாணவர்கள் கையில் புழக்கம் அதிகமாக இருக்கக்கூடிய சூழல் இருந்து கொண்டிருக்கிறது.
போதைப் பொருளுக்கு எதிராக அவர்கள் எடுத்துக்கொண்ட வாக்குறுதி மற்றும் உறுதிமொழி என்பது போதாது. இது மிக மிகக் கடுமையான நடவடிக்கையின் வாயிலாக தான் கட்டுப்படுத்த முடியும். தேவைப்பட்டால் மத்தியில் இருக்கக்கூடிய அமைப்புகளோடு கூட மாநிலத்தினுடைய மாநில முதல்வர் கலந்து பேசி, அண்டை மாநிலங்கள் வழியாக வரக்கூடிய இந்த போதைப் பொருளுக்கு தகுந்த முறையில் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு காவல்துறை செயலிழந்து கொண்டிருக்கிறதா என்ற ஒரு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதேபோல அதிகமான குற்ற வழக்குகள் பதிவாகக்கூடிய ஒரு சூழல் தமிழகத்தில் நிலவுகிறது என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.