வலி வலது காலில்.. அறுவை சிகிச்சையோ இடது காலில் - கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி
தூத்துக்குடி: வலது காலில் ஏற்பட்ட வலி காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூதாட்டிக்கு இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி மறவர் காலனியைச் சேர்ந்த மணி முருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (67).
மணி முருக குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்த தம்பதியின் மகன்கள் வெளியூரில் பணியாற்றி வருகின்றனர்.
காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி இருந்தாலே கொரோனா பரிசோதனை கட்டாயம்!
காலில் அறுவை சிகிச்சை
இந்த நிலையில் குருவம்மாள் கடந்த ஜனவரி மாதம் வலதுகால் மூட்டுப்பகுதியில் வலி இருப்பதாக கோவில்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சென்றார். 3 மாதங்களாக குருவம்மாள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி அரசு மருத்துவமனை சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர் வலதுகாலில் சிறிய அறுவை சிகிச்சை செய்தால் வலி குணமாகிவிடும் என பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
நன்றாக இருந்த காலில் அறுவை சிகிச்சை
இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குருவம்மாளுக்கு கடந்த 4 ஆம் தேதி அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. ஆனால் வலது காலுக்கு பதிலாக இடது காலில் மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ததாக மூதாட்டி குருவம்மாள் பரபரப்பு புகாரை கூறியுள்ளார். இதனால் தனக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குருவம்மாள் குற்றஞ்சாட்டி உள்ளார்.
மருத்துவர்கள், செவிலியர்கள் மீது பகீர் புகார்
கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்கனவே இடைத்தரகர்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது மூதாட்டி ஒருவருக்கு தவறுதலாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவமனைகளை கட்டி இருப்பதாகவும், தங்கள் வியாபாரத்துக்காக அரசு மருத்துவமனை வளாகத்தில் இடைத்தரகர்களை அனுமதித்துள்ளதாகவும் குற்றம்சாட்டுகின்றனர் அப்பகுதி மக்கள். அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு செவிலியர்கள் உயிர் பயம் காட்டி, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும், இதன் மூலம் லட்சக்கணக்கணக்கில் பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதில் நோயாளிகளை அனுப்பி வைக்கும் அரசு மருத்துவமனை செவிலியர்கள், இடைத் தரகர்களுக்கு தனியார் மருத்துவமனைகள் பணம் கொடுப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் நேரடியாக தலையிட்டு விசாரணைக்கு உத்தரவிடுவதுடன் மருத்துவர்கள், செவியலியர்கள், இடைத் தரகர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.