"சூத்திரன்".. ஆ.ராசா பேச்சால் கொதித்த இந்து முன்னணி.. எஸ்.ஐ மீது தாக்குதல்.. தட்டி தூக்கிய போலீஸ்!
தூத்துக்குடி: கோவில்பட்டியில் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாக இந்து முன்னணி நகர தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான காவல்துறை ஆய்வாளர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னணி
சமீபத்தில் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழாவில் திமுக எம்பி ஆ.ராசா பங்கேற்று சிறப்புரை ஆற்றியிருந்தார். இதில், இந்து மதத்தில் உள்ள சாதிய அடுக்குகள் குறித்து அவர் விளக்கி பேசினார். ஆனால் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழ்நாடு முழுவதும் பாஜகவின், 'இந்து மதத்தை அவமதித்துவிட்டதாக' ஆ.ராசா மீது காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அதேபோல, அவருக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தினர்.

பிரச்னை
இந்த பிரச்னையையடுத்து, ராசாவுக்கு எதிரான இயக்கங்களையும் பாஜகவினர் திட்டமிட்டு வந்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில், நேற்று நள்ளிரவு ராசாவுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டிக்கொண்டிருந்துள்ளனர். அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை ஆய்வாளர் சுஜித் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது இது சர்ச்சைக்குரிய போஸ்டர் என தெரிய வரவே அதனை பிடுங்கி சென்றதாக கூறப்படுகிறது.

தாக்குதல்
இதனையடுத்து காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில் கட்சியினர் காவல்துறை ஆய்வாளரின் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களை ஆய்வாளர் சுஜித் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக சீனிவாசன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஆய்வாளர் மற்றும் ஓட்டுநர் பாண்டியை தாக்கியுள்ளனர். இதனால் காவலர்கள் நிலைகுலைந்துள்ளனர்.

கைது
இந்த சம்பவத்தையடுத்து, பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டனர். தற்போது இதனைத் தொடர்ந்து இந்து முன்னணி நகர தலைவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த காவலர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை ஏடிஎஸ்பி கார்த்திகேயன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பதற்றத்தை தவிர்க்க 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications