என்னால் பாஜகவுக்கு லாபம்.. எனக்கு எந்த நஷ்டமுமில்லை.. மீண்டும் தீவிர அரசியலில் எஸ்.வி.சேகர்?
தூத்துக்குடி: பாஜக தன்னை மீண்டும் அழைத்தால் வேலை செய்ய தயாராக இருப்பதாக நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடிகரும் முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.வி. சேகர் 70 வயதை கடந்ததையொட்டி நேரில் சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு , எஸ்வி சேகர் தாயார் காலில் ஓ பன்னீர்செல்வம் விழுந்து ஆசீர்வாதமும் வாங்கினார். அப்போது சில முக்கிய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் நீண்ட காலமாக தமிழக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த எஸ்.வி.சேகர் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்தார்.

பெண் பத்திரிகையாளர்கள் விவகாரம்
அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் தீவிரமாக பணியாற்றிய எஸ்.வி.சேகர், பாஜக மீதான அதிருப்தி காரணமாக கட்சி செயல்பாடுகளில் இருந்து ஒதுங்கியுள்ளார். குறிப்பாக பெண் பத்திரிகையாளர்கள் குறித்து இழிவாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் எஸ்.வி.சேகர் மீது பல்வேறு தரப்பிலும் விமர்சனங்கள் வந்தது. கடைசி வரை கைது செய்யப்படவில்லை என்றாலும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக கூறிய பின்னரே, அவர் குறித்த பரபரப்பு சற்று ஓய்ந்தது. இதுவே நடிகர் எஸ்.வி.சேகர் அரசியல் வாழ்க்கையில் இருந்து ஒதுங்க முக்கியக் காரணமாக அமைந்தது.

எஸ்வி சேகர் பேச்சு
இந்த நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் எஸ்.வி.சேகர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து நடிகர் எஸ்.வி.சேகர் கூறுகையில், அரசியலில் நான் மவுன விரதம் கடைபிடிக்கிறேன். எனினும் அரசியலுக்கு அழைத்தால் எப்போதும் பணி செய்ய தயாராக இருக்கிறேன். நான் சார்ந்த கட்சி என்னை அழைத்தால் அவர்களுக்குதான் லாபம், அழைக்காவிட்டால் எனக்கு நஷ்டம் ஒன்றும் இல்லை.

மீண்டும் வெற்றி
அரசியலில் ஒருவர் கருத்து சொல்லும்போது, அதனால் பிரச்னை ஏற்பட்டால், அந்த கட்சிதான் அவரை பாதுகாக்க வேண்டும். வரும் 2024ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக 400 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி நிச்சயம் பதவியேற்பார்.

தமிழக பாஜக
தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை திறம்பட செயல்படுகிறார். அவருக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவது அனைவருக்கும் தேசப்பற்றை வளர்க்கும். உலக நாடுகளில் இந்தியா போன்ற சுதந்திர நாடு எங்குமில்லை. இங்கு அனைத்து மக்களுக்கும் அளவு கடந்த சுதந்திரம் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications