ஆபீசர் ஆகணுமா.. எந்த உதவின்னாலும் கேளு “போராட்டம் நடத்திய மாணவனை கூப்பிட்டு..” நெகிழ்ச்சி சம்பவம்!
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அரசு கையகப்படுத்திய தனது நிலத்திற்கு 20 ஆண்டுகளாக இழப்பீடு தரமால் இருப்பதை கண்டித்து விவசாயி சண்முகம், தனது மனைவி முருகேஸ்வரியுடன் கைகளில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவர்களுடன் அவர்களது மகன் கமலேஷும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனைப் பார்த்த கோட்டாட்சியர் மகாலட்சுமி மாணவன் கமலேஷின் படிப்பு குறித்து கேட்டறிந்தார்.
6 வருசத்துல ஒரே ஒரு முறைதான்.. எங்க கஷ்டத்தை எப்படி சொல்றது? - பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!
பின்னர் அவரிடம், ஐ.ஏ.எஸ் அதிகாரி அல்லது குரூப் 1 தேர்வு எழுதி அரசு அதிகாரியாக வர ஆசை இருக்கிறதா என்று கேட்டது மட்டுமின்றி தேவையான உதவிகளை தயார் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.
இழப்பீடு வழங்கவில்லை
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எம்.குமரெட்டையாபுரத்தைச் சேர்ந்த விவசாயி சண்முகம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கண்மாய் அமைக்க வேண்டும் என்பதற்காக அரசு கையகப்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான இழப்பீட்டு தொகையை தற்போது வரை அரசு வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. முதல்வர் முதல் அனைத்து மட்ட அரசு அதிகாரிகள் வரை பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
பேச்சுவார்த்தை நடத்திய கோட்டாட்சியர்
இந்நிலையில் அரசு எடுத்த தனது நிலத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் அல்லது தனது நிலத்தினை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுதி விவசாயி சண்முகம், தனது மனைவி முருகேஸ்வரி, மகன் கமலேஷ், கரிசல் பூமி விவசாயிகள் சங்க தலைவர் வரதராஜன் ஆகியோருடன் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்து, கைகளில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார். இதையெடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கோட்டாட்சியர் மகாலட்சுமி அழைத்து பேசினார். மேலும் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவினையும் பெற்றுக்கொண்டார். விரைவில் பதில் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து, விவசாயி சண்முகம் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார்.
மாணவர் கமலேஷ்
அப்போது தந்தையுடன் போராட்டத்தில் கலந்து கொண்ட அவரது மகன் கமலேஷை அழைத்த கோட்டாட்சியர் மகாலட்சுமி, கமலேஷின் படிப்பு விபரம் குறித்து விசாரித்தார். 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடிவிற்காக காத்திருப்பதாகவும், 11ஆம் வகுப்பில் வரலாறு பாட பிரிவு எடுக்க இருப்பதாகவும் மாணவர் கமலேஷ் தெரிவித்தார். இதையெடுத்து கோட்டாட்சியர் மகாலட்சுமி, கமலேஷிடம், அரசு வேலைக்குச் செல்ல வேண்டும், அதற்கு ஏற்றார்போல் படிக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.
நெகிழ்ச்சி
மேலும், கமலேஷிடம் கோட்டாட்சியர் மகாலட்சுமி, குரூப் 1 தேர்வு எழுதி அரசு அதிகாரி அல்லது ஐ.ஏ.எஸ் அதிகாரியாக வர ஆசை இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு மாணவர் கமலேஷ் ஆமாம் என்று தலையாட்டினார். இதையடுத்து, எந்த உதவியாக இருந்தாலும் தன்னிடம் கேட்கலாம், அரசு தேர்வுகளுக்கு தயராக தேவையான உதவிகளை செய்வதாகவும் சிறுவன் கமலேஷிடம் உறுதியளித்தார். இந்த நிகழ்வு கமலேஷின் பெற்றோர் மற்றும் அங்கிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.