அமைச்சர் கடம்பூர் ராஜூவை வீழ்த்திய கடம்பூர் இளைய ஜமின்தார்... கயத்தாறு ஒன்றியம் அமமுக வசம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தை கைப்பற்றி அதிமுகவுக்கு ஷாக் கொடுத்துள்ளார் அமமுக தென் மண்டல அமைப்புச் செயலாளரும், கடம்பூர் இளைய ஜமீனுமான மாணிக்கராஜா.
கயத்தாறு ஒன்றியத்தில் உள்ள 16 வார்டுகளில் 10 வார்டுகளை கைப்பற்றியிருப்பது அதிமுக தலைமைக்கு கடும் கோபத்தையும், அதிர்ச்சியை அளித்துள்ளது.
இதையடுத்து மாவட்ட அமைச்சரான கடம்பூர் ராஜுவை தொடர்புகொண்ட ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

16 வார்டு
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு ஒன்றியத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவின் சொந்த கிராமம் உள்ளது. ஆனால் அந்த ஒன்றியத்தை அமமுகவிடம் பறிகொடுத்துவிட்டு நிற்கிறது அதிமுக. அதுவும் 16 வார்டுகளில் வெறும் ஒரு வார்டில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றிருக்கிறது.

அதிருப்தி
திமுகவிடம் கயத்தாறு ஒன்றியம் சென்றிருந்தாலும் அதிமுக தலைமை அதைப்பற்றி கவலைப்பட்டிருக்காது. ஆனால் அமமுக வசம் சென்றது தான் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்.சை கொந்தளிக்கச் செய்துள்ளது. இது ஒட்டுமொத்த கட்சிக்கே அவமானம் என நினைக்கிறாராம் ஓ.பி.எஸ். இதனால் அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் தங்களது அதிருப்தியை கடுமையான முறையில் அவர் வெளிப்படுத்தி உள்ளார்கள்.

புகார்
திமுகவும், அமமுகவும் ரகசிய கூட்டு வைத்து தேர்தலை சந்தித்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறிய காரணம் அதிமுக தலைமையிடம் எடுபடவில்லை. சொந்த யூனியனிலேயே அமைச்சரின் செல்வாக்கு இப்படி இருந்தால் எப்படி சட்டமன்றத் தேர்தலை எல்லாம் சந்திப்பது என்ற கவலை அதிமுக தலைமைக்கு வந்துவிட்டது.

தினகரனின் தளபதி
டிடிவி தினகரனின் தளபதிகளில் முக்கியமானவர் மாணிக்கராஜா. கடம்பூர் இளைய ஜமின்தாரரான இவருக்கு கயத்தாறு பகுதியில் கட்டுடையாத மக்கள் செல்வாக்கு உள்ளது. பணத்தை வாரி இறைப்பது பற்றி கவலைப்படாதவர். இவருடைய ஊரும் கயத்தாறு ஒன்றியத்தில் தான் இருக்கிறது. கயத்தாறு பகுதியை பொறுத்தவரை இவர் சொல்வதை தான் வேதவாக்காக கேட்கின்றனர் மக்கள்.












Click it and Unblock the Notifications