நான் அதிமுக எம்.பி.. மீட்டிங்குக்கு நான் போறேன் - அடித்து ஆடிய ரவீந்திரநாத்.. பக்கத்தில் ஆர்.தர்மர்!
தூத்துக்குடி : தேர்தல் ஆணையம் நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் தான் பங்கேற்க இருப்பதாக அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தபோது தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் நடைபெறும் சங்கர நாராயணர் கோவில் ஆடி தவசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தார் ஒ.பன்னீர்செல்வம் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் குமார்.
அவருடன் ராஜ்யசபா எம்.பி ஆர்.தர்மர் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் உடனிருந்தனர். தூக்குக்குடி வருகை தந்த ஓ.பி.ரவீந்திரநாத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் 'ஓபிஎஸ் வாழ்க' என தொடர்ந்து கோஷமிட்டனர்.
ட்விஸ்ட் கொடுத்த தேர்தல் கமிஷன்.. ஓபிஎஸ் பக்கம் திரும்பிய காற்று? 'அத்தனை ஆதாரங்கள்’ ஆனா ஒரே முடிவு!
நான் பங்கேற்பேன்
பின்னர் செய்தியாளர்களைச் சந்த்தித்த அதிமுக எம்.பி ஓ.பி.ரவீந்திரநாத், தேர்தல் ஆணையம் சார்பில் நாளை சென்னையில் நடைபெற இருக்கும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நிச்சயம் தான் பங்கேற்பேன் எனத் தெரிவித்தார். மேலும், நெல்லையில் எங்களுக்கு எப்போதும் போல தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தொடர்ந்து அதிமுக உறுப்பினராகவே செயல்பட்டு வருகிறேன் என்றும் தெரிவித்துள்ளார் ஓ.பி.ரவீந்திரநாத்.
தேர்தல் ஆணைய கூட்டம்
தேர்தல் ஆணையம் நாளை நடத்தும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக சார்பில் பங்கேற்க எடப்பாடி பழனிசாமி வசம் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கைச் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்தார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸூக்கும் அழைப்பு
இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பிற்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. ஓபிஎஸ் தரப்பில் இருந்து கோவை செல்வராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓ.பி.ரவீந்திரநாத் தான் பங்கேற்க இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இருவருமே இந்தக் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.
அதிமுக எம்.பி
அதிமுகவில் இருந்து ஓ.பி.ரவீந்திரநாத்தை ஈபிஎஸ் நீக்கி, அவர் அதிமுக எம்பி இல்லை என லோக்சபா சபாநாயகருக்கும் கடிதம் அனுப்பினார். அதற்கு எதிராக ஓபிஎஸ் தரப்பும் கடிதம் அனுப்பியது. இதில், ஈபிஎஸ் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு ஓபிஎஸ் தரப்பு கேட்டுக்கொண்டபடி ஓபிஆர், அதிமுக எம்.பியாகவே செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.