நமது எதிரிகள் அறிவுக் கூர்மையானவர்கள்.. “நாம் எந்த ஆயுதத்தை எடுத்தாலும்..” - கே.எஸ்.அழகிரி பேச்சு!
தூத்துக்குடி : 100 ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் ஆர்எஸ்எஸ். ஆனால் இன்று 20 ஆண்டுகளாக மீண்டும் துளிர்த்து வருகின்றனர் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
நமது எதிரிகள் வலிமை மிக்கவர்கள். அறிவுக்கூர்மையானவர்கள். அவர்களை எதிர்ப்பது எளிதானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் கே.எஸ்.அழகிரி.
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மேற்கொள்ளவிருக்கும் பாத யாத்திரை தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது.
இதில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜய் வசந்த், விஜயதாரணி, ஜோதிமணி, திருநாவுக்கரசர் மற்றும் முன்னாள் மாநில தலைவர் தங்கபாலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாகிஸ்தானில் அசுரத்தனமான மழை.. இதுவரை 937 பேர் பலி.. 3 கோடி பேர் பாதிப்பு.. அவசர நிலை அறிவிப்பு!
எதிரிகள் புத்திசாலிகள்
இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, "நம்முடைய எதிரிகள் வலிமையானவர்கள். நம்முடைய எதிரிகள் அறிவுக் கூர்மையானவர்கள். ஆயுதங்களை ஏந்தி போராடினாலும் போராடியக் கூடியவர்கள். அறிவைப் பயன்படுத்தி போராடினாலும் போராடக் கூடியவர்கள். எனவே அவர்களை எதிர்ப்பது சாதாரண பணி அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
மீண்டும் துளிர்த்து வருகின்றனர்
மகாத்மா காந்தி இந்திய அரசியலுக்கு வருவதற்கு முன்பே ஆர்எஸ்எஸ் ஏதாவது ஒரு பெயரில் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த நினைத்துள்ளது. ஆனால் இந்திய மக்கள் அவர்களை தொடர்ந்து நிராகரித்து வந்துள்ளனர். அதன் பிறகுதான் மகாத்மா காந்தி வந்து முற்றிலுமாக அவர்களை தோற்கடித்தார். தொடர்ந்து அவர்களை தோற்கடித்து அப்புறப்படுத்தி வந்தோம். ஆனால் நூறு ஆண்டுகள் நம்மிடம் தோற்றவர்கள்தான் இன்று இருபது ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் துளிர்த்து வருகின்றனர்.
காந்திக்கு தண்டி யாத்திரை போல
மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, படேல் ஆகியோர் வழியில் நின்று அவர்களை துடைத்தெறிய வேண்டும். அதற்காகத்தான் ராகுல் காந்தி இந்த நடை பயணத்தை மேற்கொள்ள உள்ளார். ஒரு அரசியல் புரட்சியை இங்கிருந்து அவர் தொடங்குகிறார். நாட்டின் விடுதலைக்காக மகாத்மா காந்தி தண்டி யாத்திரை மேற்கொண்டார். அதுபோல ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களை நாட்டில் இருந்து ஒழிக்க, அகற்ற ராகுல் காந்தி இந்த பயணத்தை மேற்கொள்கிறார். எனவே பெரும்பாலான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும். நடைபயணத்துக்கு வரும் ஒவ்வொருவரும் கையில் கொடி ஏந்தி வர வேண்டும்." எனப் பேசினார்.
3 நாட்கள்
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்துத்துப் பேசிய கே.எஸ்.அழகிரி, "செப்டம்பர் 7ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் ராகுல் காந்தி பிரசார நடைபயணம் மேற்கொள்கிறார். கன்னியாகுமரியில் தொடங்கி காஷ்மீர் நோக்கி பிரசார பயணம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் 10,000 பேர் கலந்து கொள்கின்றனர். இந்த நடை பயணம் ஆர்எஸ்எஸ்ஸின் தவறான தத்துவத்தை எதிர்த்தும், பாஜகவின் வீழ்ச்சி தரும் பொருளாதாரத்தை எதிர்த்தும், இந்தியாவில் மனிதர்கள் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற காந்திய தத்துவத்தை வலியுறுத்தியும் நடைபெற உள்ளது" எனத் தெரிவித்தார்.