ஆர்.எம்.ஆர். பாசறை அரசியல் இயக்கமாக மாறும்... அதிரடி கிளப்பும் ராம் மோகன் ராவ்..!
தூத்துக்குடி: ஆர்.எம்.ஆர். பாசறை அரசியல் இயக்கமாக மாறும் எனக் கூறியுள்ளார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம் மோகன் ராவ் ஐ.ஏ.எஸ். தனது ஓய்வுக்காலத்தில் சமுதாய ரீதியிலான பணிகளை கவனித்து வருகிறார். ஆர்.எம்.ஆர். பாசறை என்ற அமைப்பில் 10 சமுதாய அமைப்புகளை ஒருங்கிணைத்து அவர் அவ்வப்போது ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடைபெற்ற அந்தணர் அமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர் தமிழகத்தில் அந்தணர் சமுதாயத்திற்கென தனி நல வாரியம் அமைக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 30 லட்சம் அந்தணர்கள் உள்ளதாகவும் அவர்களுக்கு இப்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த முக்கியத்துவமும் தருவதில்லை எனவும் கூறியுள்ளார்.
மேலும், தனது பெயரில் நடைபெற்று வரும் ஆர்.எம்.ஆர் பாசறை விரைவில் அரசியல் இயக்கமாக மாறும் என்றும் ஆனால் அது எப்போது என்பதை இப்போது தாம் கூறமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார். இவர் தலைமைச் செயலாளராக இருந்தபோது இவரது வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனை இப்போது உள்ள ஆட்சியாளர்கள் தட்டிக் கேட்கவில்லை என்பது அவரது மன வருத்தத்திற்கு காரணமாகும். ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் அவரை அடக்கம் செய்யும் வரை அனைத்து விவகாரங்களிலும் ராம் மோகன் ராவின் பங்களிப்பு முக்கியமானது. இன்னும் சொல்லப்போனால் ஜெயலலிதா அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட காலகட்டத்தில் நிகழ்ந்த ஒவ்வொரு நடவடிக்கைகளையும் அவர் அறிந்துள்ளார்.
இந்நிலையில் அரசியல் இயக்கம், பாசறை எனக் கூறி திருச்செந்தூரில் அதிரடி கிளப்பியுள்ளார் ராம் மோகன் ராவ்.