ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து.. 6.34 டன் ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 6.34 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது
இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், பல பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை
இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழக அரசின் அனுமதியுடன் மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஸ்டெர்லைட் ஆலை
அதன்படி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 13ஆம் தேதி முதலாவதாக 4.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்பட்டு நெல்லை மருத்துவக் கல்லூரிக்கு டேங்கர் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆக்சிஜன் உற்பத்தி பணி பாதிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாற்றை சரி செய்யும் முயற்சியில் ஆலையின் தொழில்நுட்ப குழுவினர் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட வல்லுநர்கள் குழுவின் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் ஆலைக்கு வந்து பழுதை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து தற்போது, ஆக்ஸிஜன் உற்பத்தி பிரிவில் குளிர்விக்கும் கலனில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
6.34 டன் ஆக்சிஜன்
உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் குளிர்விக்கப்பட்டு மருத்துவ பயன்பாட்டுக்காக வெளியே கொண்டுவர 36 மணி நேரம் வரை ஆகும். அதன்படி நேற்று மாலையில் ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 6.34 டன் திரவ ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி புறப்பட்டுச் சென்றது.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
ஆக்சிஜன் நிரப்பப்பட்ட லாரியை ஸ்டெர்லைட் ஆலை முதன்மை செயல் அதிகாரி பங்கஜ் குமார் கொடியசைத்து வழியனுப்பினார். ஆக்சிஜன் லாரிக்கு பாதுகாப்பாக நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் சென்றனர். இதனையடுத்து இரவிலும் ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி, தேவையுள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.