காலை தூக்கி கண்ட்றாவி டான்ஸ்.. தூத்துக்குடி பேரை கெடுத்த 2கே கிட்ஸ்.. "வசமாக சிக்கி" இப்போ சரணாகதி!
தூத்துக்குடி: கடந்த சில நாட்களுக்கு முன்பாக தூத்துக்குடி சின்னத்தின் மீது அமர்ந்து முகம் சுளிக்க வைக்கும் வகையில் நடனம் ஆடிய கல்லூரி மாணவர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் மன்னிப்பு கேட்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
சமூக வலைதளங்களை அனைவரும் பயன்படுத்த தொடங்கிய பிறகு பொது இடங்களில் செல்பி எடுப்பது, வீடியோ ரெக்கார்ட் செய்வது, சினிமா பாடல்களை பாடி அதை வீடியோ எடுத்து பகிர்வது வாடிக்கையாக உள்ளது.
டிக்டாக், ரீல்ஸ், ஷார்ட்ஸ் வருகைக்கு பிறகு இந்த டிரெண்டிங் கலாச்சாரம் அனைவரிடமும் பரவி உள்ளது. வாரா வாரம் புதிதாக ஏதாவது ஒரு விசயம் இணையதளத்தில் டிரெண்டாகி அதை பிரபலங்கள் தொடங்கி பொதுமக்கள் வரை செய்து வீடியோ வெளியிடுவது வாடிக்கையாகி இருக்கிறது.

மலையாள பாடல்
குறிப்பாக பிரபலமாகும் சினிமா பாடல்கள், நடன ஸ்டெப்புகளை போல் மக்களும் நடனமாடி சமூக வலைதளங்களில் பகிர்ந்து டிரெண்ட் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக மலையாள திரைப்படமான ரெயின் ரெயின் கம் எகெயின் - இல் வரும் தெம்மா தெம்மா பாடல் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி உள்ளது.

கேரள மாணவிகள்
மலையாளத்தில் பிரபலமான இந்த பாடலுக்கு கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவிகள் நடனமாடினர். முகம் சுளிக்க வைக்கும் ஸ்டெப்புகளை கொண்ட கேரள மாணவிகளின் நடனம் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. ஒரு பக்கம் இதற்கு கடும் எதிர்ப்புகள் சமூக வலைதளங்களில் எழுந்தாலும் இந்திய அளவில் ஏராளமானோர் இதே ஸ்டெப்புகளுடன் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வந்தனர்.

தமிழ்நாடு மாணவர்கள்
இந்த வைரல் ஃபீவர் தமிழ்நாட்டையும் விட்டுவைக்கவில்லை. இளைஞர்கள் பலரும் விடுதிகளில் நண்பர்களுடன் இந்த பாடலை ஒலிக்கவிட்டு இதே போன்று நடனமாட தொடங்கினார்கள். இதை பொது இடத்தில் செய்து வீடியோ வெளியிட்டு டிரெண்டானவர்கள்தான் தூத்துக்குடியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 11 பேர்.

தூத்துக்குடி வீடியோ
தூத்துக்குடி ஜெயராஜ் சாலையில் அமைந்து இருக்கும் நம்ம தூத்துக்குடி செல்பி பாயிண்டில் உள்ள எழுத்துக்களின் மீது 11 கல்லூரி மாணவர்கள் ஏறி அமர்ந்து கேரள மாணவிகள் தெம்மா தெம்மா பாடலுக்கு ஆடியதை போன்ற அதே முகம் சுளிக்க வைக்கும் ஸ்டெப்புகளுடன் நடனமாடினர்.

தேடி வந்த பிரச்சனை
vஇதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் அவர்களே வெளியிட அது வேகமாக பரவியது. அதே வேகத்தில் பிரச்சனையும் அவர்களை தேடி வந்தது. 11 மாணவர்களும் பொது இடத்தில் எப்படி இதுபோல் நடனமாடுவது என்று பலரும் கேள்வி எழுப்பினர். அதேபோல், தூத்துக்குடியை அவமதிக்கும் வகையில் இந்த இளைஞர்களின் செயல் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது.

மன்னிப்பு
இந்த வீடியோ தூத்துக்கு மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பார்வைக்கு சென்றது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் யார் என்று போலீசார் விசாரணையில் இறங்கினர். இந்த நிலையில் அந்த 11 கல்லூரி மாணவர்களையும் போலீசார் கண்டுபிடித்து கண்டித்து காவல்துறையினர் அறிவுரை வழங்கினர். இதனை அடுத்து மாணவர்கள் தங்கள் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.











Click it and Unblock the Notifications