கரை புரண்டோடும் பாலாறு! தண்ணீரால் கண்ணீர் வடிக்கும் ஆம்பூர் மக்கள்! போலீசாரின் முக்கிய எச்சரிக்கை!
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே கொட்டித் தீர்த்த கனமழையால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும், தரைபாலம் தண்ணீரில் மூழ்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, அங்குள்ள நீர்நிலைகளில் இருந்த ஏராளமான தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
மேலும் இந்த தண்ணீரோடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்துவரும் கனமழையாலும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பாலாற்றின் கிளை ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தரைபாலம் மூழ்கியது
இந்நிலையில், பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் இருந்து குடியாத்தம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம், கடந்த10 நாட்களாக மூழ்கியுள்ளது. இப்பகுதியில் உள்ள சங்காரபுரம், கடாம்பூர், நரியம்பட்டு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை இணைக்கும் இந்த தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை கடந்துசெல்ல பொதுமக்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர்.

பொதுமக்கள் கடும் அவதி
நாள்தோறும் பயன்படுத்தப்பட்டு வந்த தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் தொழிலாளர்களும், பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியதால், மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் மாற்று வழியாக 25 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பயணிக்க வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மற்றொரு பாலமும் மூழ்கியது
இந்நிலையில், கடந்த சில தினங்களாக விடாது கனமழை கொட்டி வருவதால், ஆம்பூரை அடுத்த மோட்டுகொல்லை பகுதியில் இருந்து துத்திப்பட்டு வழியாக உமராபாத் பகுதியை இணைக்கும் தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் அப்பகுதியிலும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், அப்பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது.

குடியிருப்புக்குள் தண்ணீர்
இதனிடையே, மோட்டுகொல்லை, சுண்ணாம்புகாளை பகுதிகளில் உள்ள ஆற்றங்கரையோரம் தாழ்வான இடங்களில் சுமார் 10க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இதனிடையே, எல்.மாங்குப்பம் பகுதியில் உள்ள தரைப்பாலத்திலும் தொடர்ந்து மழை வெள்ளம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தரைப்பாலத்தைத் தொட்டு தண்ணீர் செல்லும் நிலையில், இளைஞர்கள் சிலர் ஆபத்தை உணராமல் மீன்பிடித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications