அரசு ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு ஈடாக.. மருத்துவம், ஆய்வு பணியில் அசத்தும் வேலூர் சிஎம்சி மருத்துவமனை

Subscribe to Oneindia Tamil

வேலூர்: ஒன்றரை வருடங்களுக்கு மேலாக இந்தியாவில் கொரோனா நோய் பரவல் தாக்கம் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நோயில் இருந்து மக்களை காப்பதற்காக அறிவியல் சமூகம், செவிலியர்கள் உட்பட முன் களப்பணியாளர்கள் அத்தனைபேரும் தினம் தினம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது நாட்டில், ஐசிஎம்ஆர், நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி புனே, எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுக்கு நடுவே ஒரு தனியார் மருத்துவ நிர்வாகம் தோளோடு தோள் நின்று மக்களுக்காக வீரியத்தோடு பணியாற்றி வருகிறது என்றால் நம்ப முடிகிறதா.

உண்மைதான். அதன் பெயர்தான் வேலூர் நகரத்தில் அமைந்துள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி. 121 வருடங்கள் பழமையான மிகப் பெரிய மருத்துவமனை அது. வேலூர் பெரியாஸ்பத்திரி என்று வட்டார மொழியில் பெயர் பெற்றுவிட்டது. அந்த வார்த்தைக்கு இந்த மருத்துவமனை முற்றிலும் பொருந்தக் கூடியதுதான்.

முதல் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை

முதல் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை

நாட்டிலேயே முதல் ஓபன் ஹார்ட் அறுவை சிகிச்சை நடைபெற்றது வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்தான் என்று சொன்னால் பலருக்கும் இப்போது ஆச்சரியமாக இருக்கக்கூடும். ஆம்.. சென்னையில் எந்த மருத்துவமனையிலும் செய்யமுடியாத இதய அறுவை சிகிச்சைக்காக அங்கே இருந்து நோயாளிகள் வேலூருக்கு அனுப்பிவைக்கப்பட்ட காலம் இருந்தது என்றால் நீங்களே புரிந்து கொள்ள முடியும் இந்த மருத்துவமனையின் திறமையை.

சாதனை படைத்த வேலூர் சிஎம்சி மருத்துவமனை

சாதனை படைத்த வேலூர் சிஎம்சி மருத்துவமனை

நாட்டிலேயே முதல் முறையாக நோயாளி ஒருவருக்கு ரத்தத்தில் எச்ஐவி கண்டுபிடிக்கப்பட்டதும் இந்த மருத்துவமனையில்தான், தொழுநோய் நோய்க்கு, உலகிலேயே முதல்முறையாக ரீகஸ்ட்ரக்டிவ் அறுவை சிகிச்சை இந்த மருத்துவமனையில்தான் மேற்கொள்ளப்பட்டது. இந்தியாவில் முதல் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில்தான் நடைபெற்றது. நாட்டிலேயே போலியோ இல்லாத முதல் கிராமத்தை உருவாக்கியது இந்த மருத்துவக்கல்லூரிதான். இப்படி இதன் சாதனைப் பட்டியல் கணக்கிட முடியாத அளவுக்கு நீண்டுகொண்டே செல்கிறது.

ஏழைகளுக்கு தரமான சிகிச்சை

ஏழைகளுக்கு தரமான சிகிச்சை

3000 படுக்கை வசதி கொண்ட இந்த பிரம்மாண்ட மருத்துவமனையின் நோக்கம், அப்போதும், இப்போதும், எப்போதுமே ஒன்றுதான். ஏழை, எளியவர்கள், பின்தங்கியவர்கள் நல்ல மருத்துவ சிகிச்சையை பெற வேண்டும் என்பது மட்டும்தான். அந்த குறிக்கோள் காரணமாகவோ என்னவோ, அனைத்து சாதனைகளையும் தொடர்ந்து படைத்துக் கொண்டிருக்கிறது வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மருத்துவமனை.

வேலூர் சிஎம்சி உருவான கதை

வேலூர் சிஎம்சி உருவான கதை

வேலூர் சி.எம்.சி மருத்துவமனை உருவானது ஒரு உருக்கமான பின்னணியில்தான். அது, 1894ம் ஆண்டு. அன்று இரவு, மூன்று ஆண்கள், அப்போதைய மதராஸ் மாகாணத்தின் (இப்போதைய தமிழ்நாடு) திண்டிவனத்தில் உள்ள கிறிஸ்தவ மிஷனரியைச் சேர்ந்த மருத்துவரான ஜான் ஸ்கடரின் கதவை அடுத்தடுத்து பதற்றத்தோடு, வந்து தட்டினர். அந்த 3 ஆண்களும் தங்கள் நிறை மாத கர்ப்பிணி மனைவிகளை அவசரமாக அங்கு அழைத்து வந்திருந்தனர். ஊரிலுள்ள நாட்டு வைத்திய பெண்மணிகளால் கைவிடப்பட்ட கர்ப்பிணிகள் அவர்கள். எனவேதான் கடைசி நேரத்தில் அங்கே வந்திருந்தனர்.

பலியான 3 பெண்கள்

பலியான 3 பெண்கள்

ஆனால், துரதிர்ஷ்டவசமாக, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நடைமுறையில் இருந்த சமூக நடைமுறைப்படி, பெண் நோயாளிகளுக்கு ஆண் மருத்துவர்கள் சிகிச்சையளிக்க முடியாது. அதனால் ஒரு மருத்துவராக இருந்தும், ஜான் ஸ்கடர் நிறை மாத கர்ப்பிணிகளுக்கு அவர் சிகிச்சையளிக்க முடியவில்லை. எனவே, ஜான் ஸ்கடரின் மகள் ஐடா, அந்த பெண்களுக்கு பிரசவம் பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனால், 24 வயதான ஜடாவின் அனுபவமின்மை, அந்த இக்கட்டான நிலைமைக்கு உதவவில்லை. மூன்று பெண்களும் அன்றிரவு அடுத்தடுத்து பிரசவத்தில் இறந்தனர்.

கல்வி கற்ற ஜடா எஸ் ஸ்கடர்

கல்வி கற்ற ஜடா எஸ் ஸ்கடர்

இந்த சம்பவத்தின் ஒரு சோகம் ஜடா மனதில் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரால் மறக்கவே முடியாத வடுவை ஏற்படுத்தியது. எனவே மருத்துவத்தை கற்றுத் தேற, முழு மூச்சாக ஓடினார். ஐடா எஸ். ஸ்கடரின் நோக்கம் இந்திய பெண்களுக்கு தரமான சுகாதார சேவையை குறைந்த கட்டணத்தில் தருவதுதான். அவர் மனதில் அது மட்டுமே இருந்தது.
அமெரிக்காவில் தனது மருத்துவக் கல்வியை முடித்த பின்னர், 1900 இல் திரும்பி வந்து வேலூரில் ஒரு சிறிய மருத்துவமனையை அமைத்தார். மாணவிகளுக்கு மருத்துவம் கற்பிக்க ஆரம்பித்தார். முதல் பேட்ஜாக 17 பெண்களுக்கு மருத்துவ கல்வியை கற்பித்தார். அன்று முதல், பல ஆண்டுகள் மற்றும் பல தசாப்தங்களாக, ஐடா ஸ்கடரின் சிறிய மருத்துவமனை நவீன இந்தியாவின் சுகாதார அமைப்பில் வெளிச்சமாக மாறியது.

ஆராய்ச்சியில் முன்னிலை

ஆராய்ச்சியில் முன்னிலை

கிறிஸ்தவ சமூகத்தால் நடத்தப்படும் இந்த மருத்துவப் பள்ளி, மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் எப்போதும், முக்கியமான நோய் காலகட்டங்களில் மத்தியில் நின்று களமாடியுள்ளது. இந்த கொரோனா காலத்திலும் அப்படித்தான்.
வைரஸை ஆய்வு செய்வதிலிருந்து, சிகிச்சை வழங்குதல் வரை, சி.எம்.சி.யின் மருத்துவர்கள், ஐ.சி.எம்.ஆர், எய்ம்ஸ் மற்றும் என்.ஐ.வி புனே போன்ற அரசு நிறுவனங்களுக்கு ஈடான வேகத்தைக் கொண்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டில் சி.எம்.சி வேலூரில் இந்தியாவில் தொற்றுநோயியல் முதல் பாடத்திட்டத்தை ஆரம்பித்தவர்களில் இந்தியாவின் முன்னணி தொற்றுநோயியல் நிபுணர்களில் ஒருவரும் தற்போது தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவராக இருப்பவருமான முலியில் ஒருவர். முலியில் மருத்துவ கல்வி படித்தபோது, அந்த கட்டணத்தை செலுத்த முடியாமல், அவரது பெற்றோர் கஷ்டப்பட்டபோது, உதவியது சி.எம்.சி. மருத்துவமனைதான். எனவே, அந்த மருத்துவமனைக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார் முலியில்.

டாக்டர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி

டாக்டர்களுக்கு வெளிநாட்டு பயிற்சி


வேலூர் சி.எம்.சி. எப்படி சிகிச்சை முறைகளில் முன்னிலையில் இருக்கிறது என்பது குறித்து, முலியில் கூறுகையில்,
"பல்கலைக்கழகம் மிகவும் கவனத்தோடு செய்யும் ஒரு விஷயம், முடிந்தவரை ஊழியர்களைப் பயிற்றுவிப்பதாகும். சி.எம்.சி-யில் இல்லாத பாடங்களைக் கொண்டுவருவதற்காக ஒரு வெளிநாட்டு பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை அனுப்புவது வாடிக்கையாகவே உள்ளது," என்று அவர் கூறினார். டாக்டர், டி. ஜேக்கப் ஜான் கூறுகையில், "மேலை நாடுகளில் எச்.ஐ.வி ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியபோது, அந்த நோய் ஒருபோதும் இந்தியாவுக்கு வர முடியாது என்று நினைத்தேன், ஏனென்றால் நம்மிடம் அதிக ஓரினச்சேர்க்கையாளர்கள் இல்லை. இருப்பினும், ஒரு முதுகலை மாணவர் என் எண்ணத்தை மாற்றினார். " என்கிறார். ஏனென்றால், இந்தியாவில், எச்.ஐ.வி வைரஸ் உள்ள ரத்த மாதிரியை இந்த மருத்துவமனையில்தான் முதல் முறையாக, ஒருவரிடம் கண்டறிந்துள்ளனர். அப்போது வைராலஜி துறையின் இயக்குநராக இருந்தவர் டாக்டர் ஜான்தான்.

நீண்ட கால விடுமுறை வழங்கி பயிற்சி

நீண்ட கால விடுமுறை வழங்கி பயிற்சி

முலியிலைப் போலவே, ஜானும் வைராலஜி துறையில் பயிற்சியளிக்க அவர்களின் வெளிநாட்டு கல்வி உதவி வருகிறது.
வெளிநாடுகளில் படிப்பதற்கு ஆசிரியர்களுக்கு நீண்ட விடுமுறை வழங்குவது சிஎம்சியின் கொள்கையாகும். அது நிறைய திறமைசாலிகளை உருவாக்குவதில் உதவுகிறது. சி.எம்.சியில் பணியாற்றிக் கொண்டு அங்கேயிருந்து நான்கு ஆண்டு விடுப்பு எடுத்து, ​​ஜான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் நுண்ணுயிரியல் படிக்கச் சென்றார். இதுதான் இப்போது ஜானை இந்தியாவின் முன்னணி வைராலஜி நிபுணர்களில் ஒருவராக முன்னேற வைத்துள்ளது.

மருத்துவத்தில் லாபம் பார்க்க கூடாது

மருத்துவத்தில் லாபம் பார்க்க கூடாது

"நோயாளிகளை குணப்படுத்த வேண்டும் என்ற கிறிஸ்தவ மதத்தின் முக்கிய நோக்கம், மருத்துவத்திலிருந்து லாபம் பெறக் கூடாது என்ற தத்துவம் போன்றவை, சி.எம்.சி வேலூரை இந்தியாவின் பிற நிறுவனங்களிலிருந்து தனித்துவப்படுத்தி சிறப்பான இடத்தில் வைத்துள்ளது. கிறிஸ்தவம் என்பதே நோயாளிகளை குணப்படுத்துவது பற்றிய மெசேஜ்களால் நிரம்பியுள்ள மதம். அந்த ஆர்வம் ஆரம்பகால மிஷனரிகளை வழிநடத்தியது. இன்று, அந்த மெசேஜ் சி.எம்.சி சமூகத்தை தொடர்ந்து வலுப்படுத்துகிறது, " என்று டாக்டர் ஜான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+