சிங்கப்பெண்ணே.. சிங்கப்பெண்ணே.. காவலர்களாக தேர்வான 3 சகோதரிகள்! முதல் வாழ்த்துச்சொன்ன கனிமொழி!
வேலூர்: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உடன்பிறந்த மூன்று சகோதரிகள் தமிழ்நாடு காவல்துறையில் ஒரே நேரத்தில் காவலர்களாக தேர்வாகியுள்ள நிலையில் அவர்களுக்கு முதல் வாழ்த்துச் சொல்லி மகிழ்வை வெளிப்படுத்தியுள்ளார் கனிமொழி எம்.பி.
தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பல்வேறு அரசு விழாக்கள், ஆய்வுப்பணிகளில் ஈடுபட்டிருந்த அவர், அதனிடையே இந்த சகோதரிகள் மூன்று பேரையும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துக் கூறியிருக்கிறார்.
கனிமொழி தங்களை இந்தளவு கவனத்தில் கொண்டு வாழ்த்துக் கூறுவார் என்பதை எதிர்பார்க்காத அந்த சகோதரிகள் இதனால் நெகிழ்ந்துவிட்டனர்.
எல்லாத்துக்கும் ’அவரே’ காரணம்! தூது விட்ட ஓ.பன்னீர்செல்வம்! கடுகடுத்த சசிகலா! அரண்டு போன தூதுவர்கள்!
மூன்று சகோதரிகள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ் ஆவதம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் - ஷகிலா தம்பதியினர். இவர்களுக்கு வைஷ்ணவி, நிரஞ்சனி, ப்ரீத்தி என மொத்தம் மூன்று மகள்கள் இருக்கின்றனர். இவர்கள் மூவரும் ஒரே நேரத்தில் காவலர் தேர்வுக்கு தேர்வாகியுள்ளனர். இதை அறிந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அலைபேசி வாயிலாக வைஷ்ணவியை தொடர்புகொண்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முதல் வாழ்த்து
வைஷ்ணவி இது தொடர்பாக கூறிய போது, தனக்கு வாழ்த்து தெரிவித்த முதல் அரசியல் தலைவர் கனிமொழி என்றும் அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்வதாகவும் நெகிழ்ந்தார். வைஷ்ணவி, நிரஞ்சனி மற்றும் ப்ரீத்தி ஆகிய மூன்று சகோதரிகளும் திருவள்ளூரில் காவல் பயிற்சியை முடித்துள்ளதால் விரைவில் அவர்கள் மூவரும் காவலர் பணியில் நேரடியாக ஈடுபட உள்ளார்கள்
மூன்று பெண் பிள்ளைகள்
அக்கா தங்கைகள் மூவரும் ஒரே நேரத்தில் தமிழக காவல்துறையில் சேர உள்ளதை ஆவதம் கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். மூன்று பெண் பிள்ளைகளை வளர்த்து எப்படி ஆளாக்கப் போகிறாரோ என பலரும் ஏகடியம் பேசிய நிலையில், தனது மூன்று மகள்களையும் வீரமங்கைகளாக வளர்த்து காவலர்களாக ஆக்கியிருக்கிறார் வெங்கடேசன். தமிழக காவல்துறையின் அடுத்தடுத்த தேர்வுகளை எதிர்கொண்டு உதவி காவல் ஆய்வாளர், டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவியிடங்களுக்கும் அந்தச் சகோதரிகள் முயற்சிப்பார்கள் எனத் தெரிகிறது.
முறையாக பயிற்சி
வைஷ்ணவி, நிரஞ்சனி, ப்ரீத்தி ஆகிய மூன்று பேரும் பள்ளிப்பருவம் முதலே என்.சி.சி. உள்ளிட்ட அமைப்புகளில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால் காவலர் தேர்வில் எளிதாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.