ஓபிஎஸ், இபிஎஸ் 2 பேரில் யார் தயவும் திமுகவுக்கு தேவை இல்லை! அமைச்சர் துரைமுருகன் அதிரடி
வேலூர்: ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரது தயவும் திமுகவுக்கு தேவையில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிமுக தலைமைக் கழகம் சீல் வைப்புக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என அவர் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ள சென்ற அவர் செய்தியாளர்களிடம் இதனைக் கூறினார்.
“எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அண்ணன் பன்னீர்செல்வம் நலமாக வேண்டும்
வேலூர் பஸ் நிலையம்
வேலூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தை கடந்த மாதம் 30-ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் அங்கு எஞ்சியிருந்த பணிகள் தற்போது முழுமை அடைந்துவிட்டதால் வேலூர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. அதற்கான விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஓ.பன்னீர்செல்வத்தையும் எடப்பாடி பழனிசாமியையும் நம்பி திமுக கிடையாது என்றும் அவர்கள் இருவரது ஆதரவும் தங்களுக்கு தேவையே இல்லை எனவும் கூறினார்.
2 நாட்களில் குணம்
மேலும், தமிழக ஆளுநர் ரவி சனாதனம் பற்றி பேசி வருவதால் அவர் சனாதன வாதி என்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அழைப்பிதழில் அரசு விதிமுறைப்படி பெயர்கள் போட்டிருக்க வேண்டும் எனக் கூறினார். கொரோனாவை பொறுத்தவரை தமிழகத்தில் கட்டுக்குள் தான் இருப்பதாகவும் இப்போது மெல்ல அதிகரித்தாலும் கூட பழைய வேகமில்லை என்றார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது 2 நாட்களில் சரியாகி விடுவதாக தெரிவித்தார்.
ஆட்சியர் மீது கோபம்
முதலமைச்சர் ஸ்டாலின் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் துரைமுருகன் இவ்வாறு கூறியிருப்பது கவனிக்கத்தக்க ஒன்றாகும். மேலும், வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் சரியில்லை என புதிய குண்டை வீசிய அமைச்சர் துரைமுருகன் இதற்கு மாநகராட்சி ஆணையரும், மாவட்ட ஆட்சியரும் பதில் அளிக்க வேண்டும் என பொதுவெளியிலேயே தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
தடுப்பணைகள்
பாலாற்றின் குறுக்கே 5 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என உறுதியளித்த அமைச்சர் துரைமுருகன், வேலூர் மாவட்டத்திற்கு திமுக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சிப் பணிகளை பட்டியலிட்டார். இதனிடையே பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைக்க ஒரு விழா, புதிய பேருந்து நிலையத்தை திறக்க ஒரு விழாவா என அதிமுகவினர் விமர்சித்துள்ளனர்.