அதிமுக எம்.பி. கூனி குறுகி இருப்பார்.. கதிர் ஆனந்த் கேள்வி கேட்பார்.. வேலூரில் ஸ்டாலின் பிரச்சாரம்
வேலூர்: வேலூர் லோக்சபா தொகுதிக்கு ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. வேலூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, லத்தேரி பகுதியில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
ஸ்டாலின் தனது பிரச்சாரத்தில் கூறியதாவது: சதி செய்து வேலூர் நாடாளுமன்ற தேர்தல் தடுத்து நிறுத்தப்பட்டது. 23 தொகுதிகளில் திமுக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு அனைத்திலும் திமுக வென்றுள்ளது.
லோக்சபாவில் உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் திமுகதான் 3வது பெரிய கட்சியாகும். இப்பொழுது கதிர் ஆனந்தையும் லோக்சபா அனுப்பி வைத்தால், மேலும் ஒரு உதயசூரியனாக, அவர் செயல்படுவார்.
பத்தோடு பதினொன்று
எதிர் முகாம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை. அவரை தேர்ந்தெடுத்தால், பத்தோடு பதினொன்றாகத்தான் அவரை பார்ப்பார்கள். அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், அடிமையாக, கூனிக்குறுகி எப்படி இருக்கிறார்களோ, அதே நிலையில்தான், வேலூர் அதிமுக கூட்டணி வேட்பாளரும் இருக்க முடியும். இதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
வேலூர் மாவட்ட இடைத் தேர்தல்கள்
லோக்சபா தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியைத் அளித்திருக்கக் கூடிய தமிழ்நாட்டினுடைய வாக்காளர் பெருமக்களுக்கு நான் இந்த நேரத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வேலூர் மாவட்டத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. ஆம்பூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும், திமுகதான் வெற்றி பெற்றது. 22 தொகுதிகளில் சட்டசபை இடைத் தேர்தல் நடைபெற்றது. அதில் 13ல் வெற்றி பெற்றோம். அதிமுக 9ல் மட்டமே வெற்றி. முதல்வர், அமைச்சர்கள், தமிழகத்தில் ஆட்சியில் நாங்கள்தான் இருக்க வேண்டும் என மக்கள் வாக்களித்ததாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
எது பெரிது
13 இடங்களில் திமுக வெற்றி பெற்றது. அதில் 1 இடம் ஏற்கனவே கருணாநிதி பதவி வகித்த திருவாரூர் தொகுதி. அதை மீண்டும் கைப்பற்றியுள்ளோம். மற்ற 12 தொகுதியுமே, அதிமுக வசமிருந்த தொகுதிகள். அதிமுக வசமிருந்து திமுக கைப்பற்றியுள்ளது. அப்போ வெற்றி யாருக்கு என்பதை சிந்துத்து பாருங்கள். 9 பெரிதா, 13 பெரிதா? 13தானே பெரிது. எம்எல்ஏக்கள் கணக்கின்படி நாம் ஆட்சியில் வந்து உட்கார முடியாத நிலை வந்து இருக்கலாம். ஆனால் விரைவில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் வரத்தான் போகிறது.
வாழ்க கோஷம்
லோக்சபாவில் ஏற்கனவே திமுக அணி சார்பில் 38 பேர் சென்றுள்ளனர். 39வது உறுப்பினராக கதிர் ஆனந்த் செல்ல வேண்டும். 38 பேரும், லோக்சபாவில், திராவிட முன்னேற்றக் கழகம் வாழ்க, கலைஞர் வாழ்க, தமிழ் வாழ்க, தந்தை பெரியார் வாழ்க, டாக்டர் அம்பேத்கர் வாழ்க என்ற முழக்கத்தை நாடாளுமன்றத்தில் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
உதய சூரியன் சின்னத்திற்கு ஆதரவு
மக்களுடைய பிரச்சினைகளை முதலில் குரல் எழுப்புவதும் திமுக அணிதான். எனவே வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரச்சனைகளை சுட்டிக்காட்ட கதிர் ஆனந்த் டெல்லி செல்ல வேண்டும் என்று சொன்னால், நீங்கள் வர ஐந்தாம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், உதயசூரியன் சின்னத்திற்கு, ஆதரவு தர வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.