6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்!
வேலூர்: தமிழகத்தில் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 4, 308 மருத்துவ காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், இன்று கோவிட் தடுப்பூசி சிறப்பு தடுப்பூசி முகாமை, சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தொடங்கி வைத்து, பின்னர் மருத்துவமனையை ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியதாவது: தமிழக முழுவதும் சிறப்பு முகாம்கள் மூலம் 27 லட்சம் தடுப்பூசிகள் இன்றைக்கு கையிருப்பில் இருக்கிறது. இந்த தடுப்பூசிகளையும் போடுவதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
18 வயதுக்கு மேற்பட்டோர் கவனத்திற்கு.. கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடக்கம்!
கார்போ வேக்ஸ் தடுப்பூசி
17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு, பூஸ்டர் தடுப்பூசியாக கார்போ வேக்ஸ் என்ற தடுப்பூசி போடப்பட்டு வந்தது. தற்போது மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கோவாக்சின், கோவி ஷீல்டு ஆகிய தடுப்பூசி போட்டவர்கள் கூட கார்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை பூஸ்டர் தடுப்பூசியாக போட்டுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. எனவே. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியாக கோர்போ வேக்ஸ் என்ற தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம்.
6 புதிய மருத்துவக் கல்லூரிகள்
தமிழக முழுவதும் காலியாக உள்ள மருத்துவர்கள் செவிலியர்கள் உள்பட 4,308 மருத்துவ காலி பணியிடங்கள் செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த வாரம் டெல்லி சென்று, மத்திய அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு தேவையான மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள், கோவையில் புதிய மருத்துவ கல்லூரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மயிலாடுதுறை, தென்காசி, பெரம்பலூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு புதிய மருத்துவக் கல்லூரிகள் வேண்டும் என்ற கோரிக்கையோடு, தடுப்பூசிகளும் முடிந்துவிடும் நிலையில் இருப்பதால், தடுப்பூசிகளும் கூடுதலாக வேண்டும் என்ற கோரிக்கையோடு சந்திக்க உள்ளோம்.
இல்லம் தேடி மருத்துவம் திட்டம்
இந்தியாவிலேயே தாய் சேய் மரணம் குறைவாக இருப்பது தமிழகத்தில்தான். இல்லம் தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை ஒரு கோடி 65 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர், இந்த திட்டம் உலகத்திற்கு முன்மாதிரியான திட்டமாக இருப்பதால் ஜனவரி மாதம் சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற உள்ள உலகப் பொருளாதார மன்றம் மாநாட்டில், இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் செல்கிறார். அவருடன் தமிழக மருத்துவ துறை சார்பாக தமிழக அரசும் பங்கேற்க இருக்கிறது. அதில் இல்லம் தேடி மருத்துவம் தொடர்பாக அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
அம்மை நோய்களால் பாதிப்பில்லை
தமிழகத்தில் குரங்கு அம்மை மற்றும் தக்காளி அம்மை நோய்களால் யாரும் பாதிக்கப்படவில்லை. கேரளா தமிழக எல்லையில் 13 இடங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை கூட முழுவதுமாக பரிசோதனை செய்யப்படுகிறது.
மருந்துகள் கையிருப்பில் உள்ளது
தமிழகத்தில் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் போதுமான மருந்துகள் கையிருப்பில் உள்ளது. மருந்து பற்றாக்குறை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள், 10 சதவீதம் அளவுக்கு மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்தார்.