பைக், ஜீப்பை அகற்றாமல் ரோடு! சாட்டையை சுழற்றிய வேலூர் மாநகராட்சி! உதவி பொறியாளர் சஸ்பெண்ட்
வேலூர்: மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைத்தது, ஜீப் வாகனத்தை அகற்றாமல் தார்சாலை போட்ட விவகாரத்தில் வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. புதிதாக சாலை, தார்சலை அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் வேலூர் ஸ்மார்ட் சிட்டி தொடர்பான பணிகள் தான் பேசும்பொருளானது. இதற்கு சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் எடுக்காமல் அப்படியே புதிய சாலை அமைத்தது தான் காரணம்.

மோட்டார் சைக்கிள், ஜீப்புடன் ரோடு
அதாவது வேலூர் காளியம்மன் கோவில் தெருவில் இரவோடு இரவாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சிவா என்பவரின் மோட்டார் சைக்கிளுடன் சேர்த்து சிமெண்ட் சாலை போடப்பட்டது. இதையடுத்து சிமென்ட் தளத்தை பெயர்த்து எடுத்து மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டது. இதேபோல் சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட ஓடாத பழை ஜீப்பை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போடப்பட்டது.

விமர்சனம், கிண்டல்
இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. காண்ட்ராக்டர், மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி அதிகாரிகள் மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் நெட்டிசன்கள் கேலி, கிண்டல் செய்தனர். இதையடுத்து மோட்டார் சைக்கிளை அகற்றாமல் சிமெண்ட் சாலை போட்ட காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

சஸ்பெண்ட் நடவடிக்கை
மேலும் சாலை அமைத்த காண்ட்ராக்டர் மற்றும் உதவி பொறியாளரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கூறப்பட்டது. இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பாக வேலூர் மாநகராட்சி உதவி பொறியாளர் பழனி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பிளாக் லிஸ்டில் காண்ட்ராக்டர்
வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா உத்தரவில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேயர் சுஜாதா கூறுகையில், 'சம்மந்தப்பட்ட காண்ட்ராக்டர் பிளாக் லிஸ்டில் வைக்கப்பட்டுள்ளார்" என்றார். வரும் நாட்களில் மாநகராட்சி சார்பிலான பணிகள் உரிய முறையில் நடக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications