வயிற்றையும் வாயையும் கட்டி கட்டிய வீடுகள்.. சீட்டுக் கட்டு போல் பாலாற்றில் சரியும் அவலம்.. வீடியோ வைரல்
வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் காமராஜபுரம், விரிஞ்சிபுரம் பாலாற்றங்கரையில் அமைந்துள்ள வீடுகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.
Recommended Video
வடதமிழகத்தில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் ஒன்று என்றால் அது பாலாறு ஆகும். இது கர்நாடகா மாநிலம் நந்திமலையில் உற்பத்தியாகி 93 கிமீ பயணித்து, ஆந்திராவில் 33 கிமீ தூரமும் தமிழகத்தில் மிக அதிகபட்சமாக 222 கி.மீ. தொலைவுக்கு பயணித்து வயலூரில் முகத்துவாரத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.
இந்த பாலாறு காஞ்சிபுரம், வேலூர், ஆற்காடு, திருப்பத்தூர், ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்து காணப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
காஞ்சிபுரத்தில் தெறித்து ஓடும் பாலாறு... கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
காற்றழுத்த தாழ்வு நிலை
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதால் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக இடைவிடாமல் மழை பெய்து வருகிறது.
துணை ஆறுகள்
இதனால் பாலாற்றிலும் அதன் துணை ஆறுகளிலும் அதிக அளவுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உற்பத்தியாகி வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் வழியாக பயணித்து பாலாற்றுடன் கலக்கும் நீவா என்ற பொன்னை ஆற்றில் 1930 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போதுதான் அதிகபட்சமாக 60 ஆயிரம் கனஅடிக்கு நீர் வரத்து இருக்கிறது.
வெள்ள நீர்
பொன்னை தரைப்பாலமே மூழ்கி அதற்கு மேல் வெள்ள நீர் செல்கிறது. இதனால் தரைப்பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 50- க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளதால் கரையோரங்களில் உள்ள வீடுகள் அடித்து செல்லப்பட்டுள்ளன.
வெள்ளநீர்
வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்தில் ஆற்றின் கரையோரம் உள்ள வீடுகளை வெள்ளநீர் கபளீகரம் செய்துள்ளது. வயிற்றை கட்டி வாயை கட்டி கட்டிய வீடுகளை மழை நீர் அடித்துச் சென்றுள்ளது. இதுகுறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. ஏதோ சினிமா செட் போல் அப்படியே பாதியாக உடைந்து விழும் காட்சிகள் பார்ப்போரை கலங்கடிக்கச் செய்துள்ளது. அந்த வீட்டை எத்தனை கனவுகளுடன் அதன் உரிமையாளர்கள் கட்டினார்களோ அத்தனையையும் துவம்சம் செய்துவிட்டது இந்த வெள்ளம்!