13 அமைச்சர்கள் ஜெயிலுக்கு போவார்கள்! ‘திமுகவுக்கு மெசேஜ்’ லிஸ்ட்டே இருக்கு! கொந்தளித்த சிவி சண்முகம்
விழுப்புரம் : திமுக அமைச்சர்கள் 13 பேர் விரைவில் சிறைக்குச் செல்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சிவி சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்து விடுவோமா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் பேசிய அவர் அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது. எட்டப்பன் பன்னீர்செல்வம் என்றும் கட்சியையும் சின்னத்தையும் முடக்க நினைத்த ஓபிஎஸ் அதிமுகவின் துரோகி என்றும் கடுமையாகச் சாடினார்.

அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்
மின் கட்டண உயர்வைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி அறிவிப்பின்படி அதிமுக சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் அதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எம்.பி தலைமையேற்றுப் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சொத்து வரி, குடி நீர் கட்டணம், மின் கட்டணத்தை வரிசையாக உயர்த்தி வரும் தமிழக அரசைக் கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய சி.வி.சண்முகம், இன்றைக்கு மின்சார கட்டணம் மட்டும் உயர்த்தப்படவில்லை. ஆண்டுக்கு ஆறு சதவீதம் கட்டணம் உயர்த்தப்படும். விவசாயிகள் பெறும் இலவச மின்சாரத்திற்கும் மீட்டர் பொருத்தப்படவுள்ளது என்றார்.

சிறைக்கு போக தயார்
மேலும் பேசிய சிவி சண்முகம், "அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் தொடர்ந்து சோதனைகள் நடந்து வருவது குறித்து ஆவேசமாகப் பேசிய சிவி சண்முகம், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு போட்டால் நாங்கள் பயந்து விடுவோமா? எத்தனை வழக்குகள் போட்டாலும் சந்திக்க அதிமுக தயாராகவே இருக்கிறது. சிறைக்கு செல்லவும் தயாராக இருக்கிறோம். நாங்கள் சிறைக்கு செல்வது ஒன்றும் புதிதல்ல. ஏற்கனவே நங்கள் ஏழு, எட்டு முறை சிறைக்குச் சென்றுள்ளோம்.

13 அமைச்சர்கள்
திமுகவைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது. விரைவில் அந்த 13 அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள். முதலில் மின்சாரத்துறை அமைச்சர் நிச்சயம் சிறை செல்வது உறுதி. அதனை தொடர்ந்து மா.சுப்ரமணியன் உட்பட அனைத்து அமைச்சர்களும் சிறைக்குச் செல்வார்கள்.

திமுகவுக்கு மெசேஜ்
இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலமாக நாம் திமுக அரசுக்கு இன்னொரு செய்தியையும் சொல்கிறோம். அதிமுகவில் மூன்று முறை முதல்வரை பதவியை அனுபவித்து விட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட அனைத்தையும் திருடிச் சென்றுவிட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்து கொண்டு அதிமுகவை முடக்கி விடலாம் என்று நினைக்கும் ஸ்டாலினின் கனவு பலிக்காது.

100 துரோகிகள்
தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார் ஓபிஎஸ். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் அவர் பக்கம் ரவுடிகளும் குண்டர்களுமே உள்ளார்கள். தொண்டர்கள் இருக்கும் வரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது.100 பன்னீர்செல்வம் வந்தாலும் அதிமுகவை எதுவும் செய்ய முடியாது. 100 துரோகிகளை அதிமுக பார்த்துவிட்டது. சின்னத்தையும் கட்சியையும் உடைக்க நினைத்த பன்னீர்செல்வத்துக்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி." எனப் பேசினார்.












Click it and Unblock the Notifications