அமைச்சர் பொன்முடியிடம் துக்கம் விசாரிக்க வீடு தேடிச்சென்ற சி.வி.சண்முகம்! அரசியல் நாகரீக நிகழ்வு!
விழுப்புரம்: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் அதிமுக ராஜ்யசபா எம்.பி. சி.வி.சண்முகம் துக்கம் விசாரித்த நிகழ்வு விழுப்புரம் மாவட்ட அரசியலில் பேசு பொருளாக உள்ளது.
அரசியல் மேடைகளில் சி.வி.சண்முகமும், அமைச்சர் பொன்முடியும் கீரியும் பாம்புமாக சண்டையிட்டு வந்த நிலையில் இந்தச் சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் பொன்முடியின் உடன் பிறந்த சகோதரர் மருத்துவர் தியாகராஜன் காலமான நிலையில், துக்கம் விசாரிப்பதற்காக பொன்முடியை சந்திக்க சென்றார் சி.வி.சண்முகம்.

பொன்முடி தம்பி
அமைச்சர் பொன்முடியின் தம்பி தியாகராஜனை பொறுத்தவரை சிறுநீரக சிகிச்சை துறையில் சிறந்து விளங்கியவர். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைகளில் டீனாக பணியாற்றிய இவர், ஏழை எளிய சிறுநீரக நோயாளிகளுக்கு மிகச்சிறப்பாக சேவையாற்றியதன் மூலம் சுகாதாரத்துறையில் தனக்கென தனி தடம் பதித்தவர்.

கன்சல்டிங் கட்டணம்
அரசு மருத்துவராக பணியாற்றி ஓய்வுபெற்ற பிறகும் ஏழை மக்களுக்கான சேவையை தொடர்ந்து செய்தவர். கன்சல்டிங் கட்டணம் கூட வாங்காமல் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஏழை நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் வழங்கியவர் தியாகராஜன். இப்படி பல்வேறு பெருமைகளை கொண்ட இவர் ஒரு நாளும் ஒரு இடத்திலும் தனது சகோதரர் அமைச்சர் பொன்முடி என்பதை தெரிவித்ததில்லை.

சி.வி.சண்முகம்
அந்தளவுக்கு அடக்கமாக பணியாற்றியவர். இந்நிலையில் இவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலாளரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சி.வி.சண்முகம் நேரடியாக பொன்முடி வீட்டுக்கே சென்று துக்கம் விசாரித்திருக்கிறார். இது அரசியல் நாகரீக நிகழ்வாக பார்க்கப்படுவதுடன் இது போன்ற அனுகுமுறைகள் தான் எதிர்கால அரசியல் சந்ததியினருக்கு அரசியல் பண்பாடுகளை கற்றுக் கொடுக்கக் கூடியதாகவும் பார்க்கப்படுகிறது.

துக்கம் விசாரிக்க
அமைச்சர் பொன்முடி வீட்டுக்கு சி.வி.சண்முகம் சென்ற நேரம் பார்த்து அங்கு ஆ.ராசா அமர்ந்திருந்தார். இதையடுத்து சி.வி.சண்முகத்துக்கு இடம் கொடுத்து அமருமாறு அடுத்த நாற்காலியில் அமர்ந்துகொண்டார் ஆ.ராசா.












Click it and Unblock the Notifications